கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற டி20 உலககோப்பையில் இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது. அதனைத் தொடர்ந்து அடுத்த உலககோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யப்போகிறோம் என்று சொல்லி சூர்யகுமார் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவர் தலைமையில் இந்திய அணி அயர்லாந்து சென்று அந்த அணியோடு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவி அதிர்ச்சியளித்தது.
அதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஷ்ரேயாஸ் தலைமையில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட, மீதம் இருந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவியது.
இந்த சூழலில் அடுத்ததாக இந்திய அணி ஜிம்பாப்பே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 3 போட்டிகளையும் வென்று ஜிம்பாப்பே அணியை தோற்கடித்தது.
இந்த தொடரின் பரிசளிப்பு விழாவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அணியில் உள்ள இளம் வீரர்கள் களத்தில் அபார ஆற்றலையும், சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும், ஒரு கேப்டனாகவும் ஒரு அணியாகவும் எனக்குத் தேவைப்படும் ஆற்றலை அவர்கள் கொடுக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும், இந்திய அணி பயமற்ற ஆட்டத்தை ஆடிவருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரை இழந்த நிலையில், சிறிய அணியான ஜிம்பாப்பேவை வீழ்த்தி விட்டு அணி கேப்டன் ஷ்ரேயாஸ் இப்படி கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. பலரும் சிறிய அணியை வீழ்த்திவிட்டு இப்படி பேசுவதற்கு பதில், பெரிய அணியை வீழ்த்திவிட்டு இப்படி பெருமை பேசுங்கள் என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.