கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் இருவருக்கும் 25,00,000 ரூபாய் ஊக்கத் தொகை x
விளையாட்டு

தமிழ்நாடு திரும்பிய கார்த்திகா, அபினேஷ்-க்கு உற்சாக வரவேற்பு - முதல்வருடனும் நேரில் சந்திப்பு

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் கபடி பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் இருவருக்கும் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

PT WEB

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் கபடி பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் இருவருக்கும் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அழைத்துப் பாராட்டி 25,00,000 ரூபாய் ஊக்கத்தொகையையும் அளித்துள்ளார்.

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் கபடி பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியிகள் தங்கம் வென்றன. இந்நிலையில், தங்கம் வென்ற பெண்கள் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகாவும், ஆண்கள் அணியில் தேனியைச் அபினேஷ் மோகன்தாஸும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரிய மாணவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வந்து இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திகா கூறியதாவது, "தமிழ்நாடு கபடி கூட்டமைப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் இந்தியாவிற்காக விளையாடி உள்ளேன். தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்திலும் எனக்கு பயிற்சி அளித்தார்கள். தமிழ்நாடு அரசு எல்லா விதமாகவும் எனக்கு உதவி செய்தார்கள். கண்ணகி நகர் பள்ளி ஆசிரியர்களும் உதவி செய்தார்கள். இது என்னுடைய பெரிய கனவு. என்னுடைய பயிற்சியாளர் தான் என்னுடைய அப்பா அம்மா போன்று. என்னை தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுத்தினார்கள்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகிய இருவரையும் சென்னை திரும்பியவுடன் அவர்களை நேரடியாக அவர்களது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி அவர்களுக்கு 25,00,000 ரூபாய் ஊக்கத்தொகை அளித்துள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, " பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார். கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம். நேற்று நான் #BisonKaalamaadan-இல் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது" என தெரிவித்துள்ளார்.