ஆல் ரவுண்டரான இர்ஃபான் பதான் அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்தியா கிரிக்கெட் விளையாட்டை அதிகாரப்பூர்வாமக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியில் இர்ஃபான் பதான் பங்கேற்றார். அப்போது அவரது இந்த முடிவை அவர் அறிவித்தார். 35 வயது ஆன இவர் கடைசியாக கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இருந்தார். கடந்த டிசம்பரில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் அவரை யாரும் எடுக்காததால் அவர், தனது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார்.
2003ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் இர்ஃபான் பதான் இந்திய அணியில் அறிமுக ஆனார். சுமார் 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட், 29 டெஸ்ட்டில் 100 விக்கெட் மற்றும் 24 டி20 போட்டிகளில் 28 விக்கெட் சாய்த்துள்ளார்.
இந்நிலையில்தான் அவர் தனது அதிரடியான இந்த முடிவை அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய இர்ஃபான்,“நான் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் மற்றும் வி.வி.எஸ் லக்ஷ்மண் போன்ற வீரர்கள் உடனும் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது எனக்குப் பெரிய அதிர்ஷ்டம்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸின் நிகழ்ச்சி ஒன்றின் போது கூறியுள்ளார்.
“எனக்கு மிகவும் தேவையான ஆதரவை வழங்கிய எனது குடும்பத்திற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். மேலும் எனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எப்போது திரும்பி வந்தாலும் ரசிகர்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள். அவர்களின் ஆதரவு என்னை தொடர்ந்து செயல்பட வைக்கிறது”என்று அவர் கூறியுள்ளார்.