கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், நாளுக்கு நாள் பல்வேறு சுவாரஸ்யங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைக்க, சமகாலத்தின் இரண்டு ஜாம்பவான்களுக்கு இடையே அனல் பறக்க நடைபெறும் போட்டியை உலகமே உற்றுநோக்குகிறது.
அல்ஜீரிய அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து, மொத்தம் 16 கோல்களுடன் அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.
இன்னொரு புறம், செனகல் அணிக்கு எதிராக இரட்டைக்கோல் அடித்து, 14 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் மிரட்டுகிறார் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே. அத்தோடு பிரான்ஸ் நாட்டின் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளார். முன்னதாக, அந்நாட்டின் ஆலிவர் ஜிரூடை 57 கோல்கள் அடித்திருந்தார். இந்த நிலையில்தான், இவ்விருவருக்கும் இடையே அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம்பிடிக்க போட்டி நடைபெற்று வருகிறது.
மேலும், மெஸ்ஸி தனது 20 ஆண்டுகால நீண்ட கால்பந்து வாழ்க்கையின் மூலம் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையில் எம்பாப்பேயைவிட கணிசமாக முன்னிலையில் உள்ளார். ஆனால், வெறும் 27 வயதே ஆகும் கிலியன் எம்பாப்பே, உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் மிகக் குறைந்த போட்டிகளில் (15 போட்டிகளில் 14 உலகக் கோப்பை கோல்கள்) அதிவேகமாக கோல் அடித்து மெஸ்ஸியின் உலகக் கோப்பை சாதனைகளுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.