உலகப் புகழ்பெற்ற புரட்சியாளர் சேகுவாரா மற்றும் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா பிறந்த அர்ஜென்டினா நாட்டு அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். அந்த அணியில் மாரடோனாவின் பத்தாம் எண் ஜெர்சியை அணிந்து, அவரது வாரிசாகவே இன்று உலகைக் கால்பந்து மந்திரத்தால் கட்டிப்போட்டுள்ளார் லியோனல் மெஸ்ஸி.
ஆனால், இந்த உயரத்தை அவர் அடைந்த பாதை எளிதானதல்ல. பதினோரு வயதில் ‘ஜி. ஹெச்.டி’ எனும் ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மெஸ்ஸி, இனி நாலடிக்கு மேல் வளரமாட்டார் என மருத்துவர்கள் கணித்தனர். ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால், மருத்துவச் செலவைக் குறைக்கத் தனக்குத்தானே ஊசி செலுத்திக்கொள்ளும் கடினமான நிலைக்கு ஆளானார். எங்கே தேறப்போகிறார் என்ற விமர்சனங்களை உடைத்து, பதிமூன்று வயதில் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப்பில் இணைந்தார்.
அவரது மருத்துவச் செலவுகளை ஏற்ற அந்த அணிக்கு நன்றிக்கடனாக, 672 கோல்களை அடித்து, 35 கோப்பைகளையும் வென்று தந்தார். உலகளவில் சிறந்த வீரருக்கான ‘பாலன் டி ஓர்’ விருதை 8 முறை வென்றுள்ள மெஸ்ஸி, 2012ஆம் ஆண்டில் ஒரே வருடத்தில் 91 கோல்கள் அடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.
தன் வாழ்நாள் லட்சியமாக 2021இல் கோபா அமெரிக்க கோப்பையையும், அடுத்த ஆண்டே உலகக்கோப்பையையும் வென்று மாரடோனாவுக்குச் சமர்ப்பித்த மெஸ்ஸி, தற்போது ஆறாவது முறையாக உலகக்கோப்பையிலும் தொடர்ந்து அசத்தி வருகிறார்.