nehru stadium x page
கிரிக்கெட்

இடிக்கப்படும் டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்.. என்ன காரணம் தெரியுமா?

தலைநகர் புது டெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட இருக்கிறது.

Prakash J

தலைநகர் புது டெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட இருக்கிறது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது, தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம். நீண்டகாலமாக இந்தியாவின் மிகவும் பிரபலமான பல விளையாட்டு அரங்குகளில் ஒன்றாக இருந்துவரும் இம்மைதானம், முதலில் 1982ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது. பின்னர் 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகப் புதுப்பிக்கப்பட்டது. இம்மைதானம், கிட்டத்தட்ட 60,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்டது. இம்மைதானம் விளையாட்டுப் போட்டிகளைத் தவிர்த்து, பெரிய அளவிலான இசை நிகழ்ச்சிகள் மற்றும் சுதந்திர தின விழாக்கள் உட்பட தேசிய விழாக்களை நடத்தியுள்ளது. மேலும், இந்த மைதானம் வரலாற்றுரீதியாக தேசிய தடகள அணிக்கான சொந்த இடமாக செயல்பட்டு வருகிறது.

nehru stadium

இந்த நிலையில், இம்மைதானம் இடிக்கப்பட இருக்கிறது. உலகில் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும், ஒலிம்பிக், 2036ஆம் ஆண்டு இந்தியா நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமைக்காக இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அந்தத் தொடருக்கான ஏற்பாடுகளை மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு இம்மைதானம் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. அந்த நோக்கத்திலேயே, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை அறிமுகப்படுத்தும் வகையில், இம்மைதானத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் ஈடுபட்டிருப்பதாக இந்தியா டுடே ஊடகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இம்மைதானம்,102 ஏக்கர் பரப்பளவில் ஓர் அதிநவீன விளையாட்டு நகரத்திற்கு மாறும் எனத் தெரிகிறது. இருப்பினும், கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு நிலையான காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. மதிப்பீடுகள் முடிந்து இறுதித் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே மறுவடிவமைப்பு தொடங்கும்.

ஒருவேளை, முன்மொழியப்பட்ட விளையாட்டு நகரம், 102 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட உயர்நிலை பயிற்சி வசதிகள், மேம்படுத்தப்பட்ட போட்டி அரங்குகள் மற்றும் தடகள வீரர்களை மையமாகக் கொண்ட உயர் செயல்திறன் மையங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் திட்டமிடப்பட்ட வடிவத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்த திட்டம் நாட்டில் மேற்கொள்ளப்படும் மிகவும் லட்சிய விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் ஒன்றாக இருக்கும். முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான், இம்மைதானத்தில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. இந்த நிகழ்விற்காக, ரூ.30 கோடி செலவில் ஒரு மோண்டோ டிராக் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

nehru stadium

மறுபுறம், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு ஆஸ்திரேலியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த வகையில், கத்தார் மற்றும் ஆஸ்திரேலியாவின் உள்கட்டமைப்பு மாதிரிகளை அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த இரண்டு நாடுகளும் முக்கிய உலகளாவிய நிகழ்வுகளை நடத்தும் திறன் கொண்ட நவீன, பல்நோக்கு விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்கியுள்ளன. கத்தாரின் தோஹா விளையாட்டு நகரம், 617 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது கால்பந்து, நீர் விளையாட்டு மற்றும் 13 வெவ்வேறு உட்புற விளையாட்டுகளுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது. ஒரு அகாடமியைத் தவிர. இது ஒரு சிறப்பு எலும்பியல் மற்றும் விளையாட்டு மருத்துவமனையையும் கொண்டுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியாவின் பல்நோக்கு வசதிகளில் மெல்போர்னில் உள்ள டாக்லேண்ட்ஸ் ஸ்டேடியம் உள்ளது. இது கால்பந்து, ரக்பி, கிரிக்கெட் மற்றும் ஆகியவற்றை நடத்த முடியும். இந்தியாவில் புதிதாக கட்டப்பட்ட அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகம் கிரிக்கெட், நீர் விளையாட்டு, டென்னிஸ் மற்றும் தடகளம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டதாக உள்ளது. இது 250 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து ரூ.4600 கோடி செலவில் கட்டப்பட்டது.