2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்து ஆடம் கில்கிறிஸ்டின் 19 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். வைபவ் 15 சிக்ஸர்கள் அடித்து, இந்தியா 411 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி சரித்திர சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் ஆடிய அதிரடி ஆட்டம், கிரிக்கெட் உலகின் பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.
ஐசிசி வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை (149 ரன்கள், 2007 உலகக் கோப்பை) வைபவ் தகர்த்தார். இந்தப் போட்டியில் வைபவ் 175 ரன்கள் (80 பந்துகளில்) குவித்தார். ஐசிசி ஆடவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றுள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை (ஆடவர்/மகளிர்/ஜூனியர்) இறுதிப் போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ரன்கள் எடுத்திருந்த அலீசா ஹீலியின் (170 ரன்கள்) சாதனையையும் வைபவ் முறியடித்துள்ளார். வெறும் 71 பந்துகளில் 150 ரன்களை எட்டிய அவர், ஜூனியர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்த ஒரு இன்னிங்ஸில் மட்டும் அவர் 15 சிக்ஸர்களை விளாசினார். இது ஒரு ஐசிசி இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாகும். வைபவ் சூர்யவன்ஷியின் (175) அபார ஆட்டத்தால் இந்தியா 50 ஓவர்களில் 411 ரன்கள் குவித்தது. பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6-வது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
வெறும் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, இந்தத் தொடர் முழுவதும் 439 ரன்கள் குவித்து 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார்.