வைபவ் சூர்யவன்ஷி web
கிரிக்கெட்

இந்திய அணியில் முதன்முறையாக இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. பிசிசிஐ தேர்வு செய்தது எப்படி?

மறுபக்கம் வைபவ் சூர்யவன்ஷியை இந்தச் சிறுவயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் களமிறக்குவது தேவையற்ற ஓர் ஆபத்து என வல்லுநர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.

Prakash J

ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிவரும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ஜூன் மாதம் இலங்கைக்குச் செல்லும் சுற்றுப்பயணத்திற்கான இந்தியா 'ஏ' அணியில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார். இதன்மூலம், அவரது எதிர்காலம் நிர்ணயிக்கப்பட இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஐபிஎல் தொடர் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. அவர் ஐபிஎல் தொடரில் பல சீனியர் பந்துவீச்சாளர்களின் பந்துகளில்கூட அசால்ட்டாக சிக்ஸர் அடிக்கிறார். இதனால், உலக கிரிக்கெட் வல்லுநர்களால் புகழப்படுகிறார். மேலும், தாம் விளையாடிய போட்டிகளில் சதம் அடித்த வீரராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில், ஜூன் மாதம் இலங்கைக்குச் செல்லும் சுற்றுப்பயணத்திற்கான இந்தியா 'ஏ' அணியில் வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக இடம்பிடித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி

இலங்கையில் அடுத்த மாதம் ஜூன் 9-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இலங்கை 'ஏ', ஆப்கானிஸ்தான் 'ஏ' மற்றும் இந்தியா 'ஏ' ஆகிய 3 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடருக்கான இந்தியா 'ஏ' அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா U-19 மற்றும் ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் ஆடிவரும் அதிரடி ஆட்டமுமே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

திலக் வர்மா தலைமையிலான இந்த அணியில், ரியான் பராக் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். இவர்களுடன் பிரியான்ஷ் ஆர்யா, சூர்யான்ஷ் ஷெட்கே, பிரப்சிம்ரன் சிங் போன்ற அதிரடி வீரர்களும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வைபவ் சூர்யவன்ஷி

ஒருபக்கம், வைபவ் சூர்யவன்ஷியின் தேர்வுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வந்தாலும், மறுபக்கம் வைபவ் சூர்யவன்ஷியை இந்தச் சிறுவயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் களமிறக்குவது தேவையற்ற ஓர் ஆபத்து என வல்லுநர்கள் ஆரூடம் கூறுகின்றனர். இதன் காரணமாகவே, சூர்யவன்ஷியை நீண்டநாள் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதும் பிசிசிஐ, தற்போதைக்கு அவசரப்பட்டு மூத்தோர் கிரிக்கெட்டிற்குள் கொண்டு வராமல் நிதானமாகவே இந்திய ஏ அணிக்குள் சேர்த்திருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். இத்தொடரில் அவருடைய ஆட்டத்தைப் பார்த்த பின்னர், அவர் அடுத்தகட்டத்துக்குத் தேர்வு செய்யப்படலாம் எனவும் அவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இதனால் வரவிருக்கும் இலங்கை சுற்றுப்பயணம் சூர்யவன்ஷிக்கு மிகவும் முக்கியமானதாக அமையக்கூடும் என்பதில் எந்த எள்ளளவும் சந்தேகமில்லை.