ind vs nam x page
கிரிக்கெட்

T20 WC | அபிஷேக் OUT.. சாம்சன், பும்ரா Entry.. இந்திய படையை எதிர்கொள்ளுமா நமீபியா?

இந்திய அணி தனது 2ஆவது போட்டியில் நமீபியாவை இன்று எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

Prakash J

இந்திய அணி தனது 2ஆவது போட்டியில் நமீபியாவை இன்று எதிர்கொள்கிறது. இந்திய அணியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், இன்று இந்திய அணி தனது 2ஆவது போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக, அமெரிக்காவிடம் போராடி வெற்றி பெற்ற இந்திய அணியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

india team

அவரது இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் மற்றொரு தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அணியில் இணைவார் எனவும், அதேபோல் வைரஸ் காய்ச்சலில் இருந்து மீண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் அணியில் இடம்பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, அணிக்கும் ரசிகர்களுக்கும் ஊக்கத்தைத் தரும். அதுபோல் கடந்த போட்டியில் சோபித்த இஷான், ரிங்கு, ஹர்திக் உள்ளிட்டோர் இந்தப் போட்டியில் சிறப்பு சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் நெதர்லாந்திடம் கடுமையான தோல்வியடைந்த கெர்ஹார்ட் எராஸ்மஸ் தலைமையிலான நமீபியா அணி, பலமிக்க இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவும் நமீபியாவும் இதற்கு முன்பு டி20 போட்டிகளில் ஒருமுறை மட்டுமே சந்தித்துள்ளன. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில், துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, நமீபியாவை 132 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 15.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. அந்த ஆண்டு அவ்வணியில் இடம்பெற்றிருந்த கெர்ஹார்ட் எராஸ்மஸ், ஜான் நிக்கோல் லோஃப்டி-ஈடன், ஜேஜே ஸ்மிட், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் மற்றும் ரூபன் ட்ரம்பெல்மேன் உள்ளிட்ட பல வீரர்கள் தற்போதைய அணியிலும் இடம்பிடித்துள்ளனர். அவர்களின் அனுபவம், இந்திய அணிக்கு கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

india

இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இன்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, நமீபியா அணிக்கு இரவுநேரப் பயிற்சி வழங்கப்படாதது குறித்து அதன் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். ”இந்த ஆட்டத்திற்கு முன் எங்களுக்கு இரவு நேரப் பயிற்சி வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. இந்தியாவுக்கு இரண்டு இரவுநேரப் பயிற்சிகள் கிடைத்துள்ளன என்று நான் நினைக்கிறேன். இப்போது கனடாவுக்கு இரவு நேரப் பயிற்சி இருப்பதாக வெளியே பார்க்கிறேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் முடிவு செய்யுங்கள். ஆனால் நாங்கள் மைதானத்திற்கு வந்து எங்கள் நமீபிய பாணியில் போராடுவோம்” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.