virat kohli travis head controversy web
கிரிக்கெட்

விராட் கோலி ரசிகர்களால் Online Abuse.. டிராவிஸ் ஹெட் மனைவி வேதனை! என்ன நடந்தது?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட்டுக்கு ஏற்பட்ட உரசலுக்கு பிறகு டிராவிஸ் ஹெட்டின் மனைவி சமூகவலைதளங்களில் வசைபாடப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

ஆர்சிபி–எஸ்ஆர்எச் போட்டியில் கோலி–டிராவிஸ் ஹெட் வாய்த்தகராறு, பின்னர் கைகுலுக்க மறுப்பு வரை விவகாரம் தீவிரமானது. இதைத் தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் ஹெட்டின் மனைவியை சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி, குடும்பத்தினரையும் குறிவைத்து தாக்கியதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். வீரர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பம் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

ஆர்சிபி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த SRH அணி 255 ரன்களை குவித்த நிலையில், ஆர்சிபி அணி 200 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்தப்போட்டியில் ஆர்சிபி பேட்டிங் செய்தபோது விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே மோதல் வெடித்தது. போட்டி முடிந்தபிறகு கூட டிராவிஸ் ஹெட் உடன் கைக்குலுக்க விராட் கோலி மறுத்துவிட்டார்.

virat kohli travis head controversy

இவ்விவகாரத்தில் டிராவிஸ் ஹெட் மீதுதான் தவறு இருப்பதாகவும், என்ன இருந்தாலும் விராட் கோலி கைக்கொடுத்திருக்க வேண்டும் என்றும் இருவேறு தரப்பினர் கருத்திட்டு வருகின்றனர். ஆனால் இதுஒருபுறம் இருக்கு விராட் கோலி மற்றும் ஆர்சிபி ரசிகர்களால் டிராவிஸ் ஹெட் மனைவி இணையத்தில் கடுமையாக வசைப்பாடப்படுவதாகவும், தங்கள் குடும்பத்தினர் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு நடந்த வசைமொழிகளின் மறுபதிப்பு போல இதை உணர்கிறேன். நான் எழுந்தபோது என் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் குவிந்திருந்தன. நாங்கள் நலமாகவே இருக்கிறோம், ஆனால் அவர்கள் என் நண்பர்களையும் குடும்பத்தினரையும் தாக்குகிறார்கள். தற்போது அனைத்து விளையாட்டுகளிலும் ஒருவருக்கொருவர் பேசும் விதம் குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெறுகிறது என்று நான் நினைக்கிறேன். விளையாட்டில் உங்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்தாலும், இந்த விளையாட்டுக்குப் பின்னால் வீரர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இது ஒருவருக்கொருவர் அதிக அன்பையும் ஆதரவையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்" என பேசியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

கோலி-ஹெட் இடையே என்ன நடந்தது..?

SRH-க்கு எதிரான போட்டியில் ஆர்சிபி ரன்சேஸிங் செய்தபோது, 3வது ஓவரை வீசிய பாட் கம்மின்ஸ் ஓவரில் விராட் கோலிக்கும், டிராவிஸ் ஹெட்டுக்கும் முட்டிக்கொண்டது.

கம்மின்ஸ் வீசிய முதல் பந்தை விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டிய பிறகு, ஃபீல்டிங் நின்றிருந்த டிராவிஸ் ஹெட் அவருக்கு ஆஃப்சைடில் பந்தைவீசு "கோலி பந்தை ஸ்லிப்பிடம் எட்ஜ் செய்துவிடுவார்" என்று கூறினார்.

ஆனால் கம்மின்ஸ் வீசிய 2வது பந்தையும் பவுண்டரிக்கு அடித்த கோலி, நீ வந்து பந்துவீசு உன்னை சிக்சருக்கு அடிப்பேன் என்று கூறினார். அதேஓவரில் வெங்கடேஷ் ஐயர் ஒரு பவுண்டரி அடிக்க, மீண்டும் ஹெட்டை பார்த்து கத்திய கோலி ‘உனக்கு பந்துவீச பயமாக இருந்தாலும் எப்போதும் போல டக் அவுட்டில் போய் அமர்ந்துகொள்” என விமர்சித்தார்.

அடுத்த ஓவரை ஷிவாங் குமார் வீச அந்த ஓவரில் 3 சிக்சர்களை வெங்கடேஷ் ஐயர் பறக்கவிட, விராட் கோலிக்கு விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக டிராவிஸ் ஹெட் வெங்கடேஷ் ஐயரை விமர்சித்ததாக கூறப்படுகிறது. அதாவது ‘ஒரு உண்மையான பெண்ணை விட அதிக பெண் தன்மை கொண்டதாக, உங்கள் ஷாட் இருப்பதாக தனிப்பட்ட முறையில் ஹெட் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

டிராவிஸ் ஹெட்டின் இந்த கருத்து எல்லையை முற்றிலுமாக மீறிவிட்டதால், கோலியை ஆத்திரமூட்டியது. போட்டிக்குப் பிந்தைய கைகுலுக்கலின் போது கோலி, ஹெட்டைப் புறக்கணித்தபோது, ​​முகாமில் இருந்த பலர் அது முற்றிலும் நியாயமானது என்று கருதினர். போட்டி மனப்பான்மையுடன் கூடிய கேலிப் பேச்சுக்கும் அவமரியாதைக்கும் வித்தியாசம் உண்டு என்று விமர்சித்தனர். இறுதியில், ஒரு தற்காலிக பொது பிம்பத்தைப் பேணுவதை விட, உங்கள் சக வீரருக்காக நிற்பதும், சுயமரியாதையைக் காப்பதும் மிக முக்கியம் என்று ரசிகர்கள் விராட் கோலியின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்குபிறகே ஹெட்டின் மனைவியை ஆர்சிபி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்துவருவதாக சொல்லப்படுகிறது.