sky x page
கிரிக்கெட்

T20 WC | சொதப்பிய IND.. கடைசி ஓவரில் மிரட்டிய SKY.. பரிதாப தோல்வியைச் சந்தித்த USA!

டி20 உலககோப்பை தொடரில் தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 161 எடுத்தது.

Prakash J

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அணி தற்போது விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன் இன்று தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், 20 அணிகளும் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகியா அணிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த தொடரின் 3வது போட்டியில் இன்று இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த அமெரிக்கா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ind vs usa captains

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும் அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். இந்த தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வீரரான அபிஷேக் சர்மா தொடக்கப் போட்டியிலேயே டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவர், தாம் சந்தித்த முதல் பந்தை பவுண்டரி எல்லைக்குத் தூக்கினார். ஆனால், சஞ்சய் கிருஷணமூர்த்தி கையில் தஞ்சமடைந்தது. எனினும், மறுமுனையில் இஷான் கிஷான் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்தார். திலக் வர்மாவும் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார்.

ஒருகட்டத்தில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்களை இந்திய அணி இழந்தது. அப்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்றார். மேலும், அக்‌ஷர் படேலைத் தவிர மற்ற எல்லா வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களிலேயே நடையைக் கட்டினர். ஹர்திக், ரிங்கு சிங் ஆகியோர் கடைசிக் கட்டத்தில் அடித்திருந்தால் இந்திய அணி 200 ரன்களை எட்டியிருக்கும். ஆனால், அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. அதேநேரத்தில் கேப்டன் சூர்யகுமார் தனியொருவனாகப் போராடினார். இக்கட்டான நிலையில், அவர் அரைசதத்தைக் கடந்த நிலையில், கடைசி ஓவரில் அமெரிக்காவை மிரட்ட ஆரம்பித்தார். அந்த ஓவரில் முதல் பந்தில் பவுண்டரியை விரட்டிய அவர், அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்குத் தூக்கினார். அடுத்து 4வது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதன்மூலம் இந்திய அணியின் ரன்னும் சற்றே உயர்ந்தது.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடக்கம். மேலும் டி20 உலகக்கோப்பை அறிமுகப் போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த பட்டியலிலும் அவர் 2வது இடத்தைப் பிடித்தார். இதில் முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் உள்ளார். அவர் 2009ஆம் ஆண்டு அறிமுகப் போட்டியில் 88 ரன்கள் எடுத்தார். அமெரிக்க தரப்பில், ஷாட்லி வான் ஷால்க்விக் 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய அமெரிக்க அணி, இந்திய பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தொடக்கம் முதலே விக்கெட்களைப் பறிகொடுத்தது. எனினும், கடைசிவரை போராடியும் அந்த அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி தனது முதல் போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளது.முன்னதாக இதே பிரிவில் பாகிஸ்தான் தன்னுடைய முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.