குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர், பாட்காஸ்டில் “ஆர்சிபி கோப்பை வென்றாலும், ஐபிஎல்லையே வென்றது சூர்யவன்ஷி” என கூறினார். அதற்கு இணங்க ஸ்டூவர்ட் பிராட், சர்வதேச கிரிக்கெட் விளையாடாமலேயே உலக நட்சத்திரமாக மாறிய முதல் வீரர் சூர்யவன்ஷி தான் என்றும், இங்கிலாந்தில் கூட அவரைப் பற்றி பேசப்படுவதாகவும் புகழ்ந்தார்.
2026 ஐபிஎல் தொடரை தனியொரு ஆளாக திரும்பி பார்க்க வைத்தவர் 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி. நடப்பு சீசன் முழுவதும் தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் எதிரணி வீரர்களையே ரசிக்கவைத்த 15 வயது சுட்டி சிறுவன், பெரும்பாலான ஐபிஎல் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். தொடக்கத்தில் வெறும் சிக்ஸ் ஹிட்டிங் திறமைகளால் எல்லோரையும் கட்டிப்போட்ட சூர்யவன்ஷி, பின்னர் தன்னுடைய சாமர்த்தியமான நிதானமான ஆட்டத்தாலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
நடந்து முடிந்த சீசனில் 16 போட்டிகளில் 1 சதம் 5 அரைசதங்களுடன் 776 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி, 93, 96, 97 என 3 முறை சதமடிக்கும் வாய்ப்புகள் இருந்தும் தன்னுடைய அணிக்காக அதிரடியாக விளையாட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். ‘தன்னுடைய அணி வெற்றிபெறாமல், தான் பெறும் 100 ரன்கள் அர்த்தமற்றது’ என்ற மனநிலையில் இருக்கும் அவனுடைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் பலர், அவன் சதமடிக்கவில்லையே என வேதனைப்படும் அளவு அச்சிறுவனின் மீது பேரன்பை வெளிப்படுத்தினர்.
கோப்பை வென்ற ஆர்சிபி கேப்டன் கூட சூர்யவன்ஷி தான் இந்த வருட ஐபிஎல்லில் சூப்பர் ஸ்டார் என கூறியிருந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து பந்துவீச்சு ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் சூர்யவன்ஷியை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஆர்சிபிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த வருத்தம் குறித்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர், ஸ்டூவர்ட் பிராட் உடனான பாட்காஸ்டில் பகிர்ந்துகொண்டார். அப்போது பட்லர் ‘ஆர்சிபி கோப்பை வென்றிருந்தாலும், ஐபிஎல்லையே வென்றது சூர்யவன்ஷி தான்’ என புகழாரம் சூட்டினார்.
அதற்கு பதிலளித்து பேசிய ஸ்டூவர்ட் பிராட், “சர்வதேச கிரிக்கெட் விளையாடாமலேயே ஒரு வீரர் சர்வதேச நட்சத்திரமாக உருவெடுப்பதை நான் பார்த்ததில்லை என்று எனது கடைசி பாட்காஸ்டில் கூறியிருந்தேன். ஆனால் தற்போது இங்கிலாந்தில் கூட மக்கள் சூர்யவன்ஷியை பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் ஐபிஎல் ரசிகர்களாக இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் அவர்கள், 'அடக் கடவுளே, நீங்கள் சூர்யவன்ஷியைப் பார்த்திருக்கிறீர்களா? அவர் நம்பமுடியாதவர்' என்று கூறுகிறார்கள். அவர் ஒரு உலக நட்சத்திரமாகிவிட்டார். ஏற்கனவே உலக நட்சத்திரமாக கோலி இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட் விளையாடாமலேயே உலக நட்சத்திரமாக மாறிய முதல் வீரர் ஒருவேளை சூர்யவன்ஷியாகத்தான் இருப்பார்” என்று புகழ்ந்துள்ளார்.ச்