இளம் கிரிக்கெட் அதிசயமாக விளங்கும் வைபவ் சூர்யவன்ஷியின் தம்பி ஆசிர்வாத், தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணிக்காக 87 பந்துகளில் 103 ரன்கள் அடித்து தலைசிறந்த ஆட்டம் ஆடியுள்ளார். 20 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கிய இந்த இன்னிங்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி, 10 வயதிலேயே புதிய நட்சத்திரமாக ஆசிர்வாதை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.
இளம் வயதில் சதம், ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள், இந்திய அணிக்கு தேர்வு என 15 வயதில் கிரிக்கெட் உலகத்தையே மிரட்டிவருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. பும்ரா, கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசல்வுட் என உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எல்லாம் சிக்சர்களுக்கு பந்தாடி வரும் சூர்யவன்ஷி, ஒட்டுமொத்தமாக உலக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்தசூழலில் தான் தற்போது சூர்யவன்ஷியின் குடும்பத்திலிருந்து மற்றொரு கிரிக்கெட்டர் இணையத்தை கலக்கிவருகிறார். இந்தமுறை அது சூர்யவன்ஷி அல்ல, 10 வயதேயாகும் அவருடைய தம்பி ஆசிர்வாத்.
சர்வதேச அரங்கில் தனக்கென ஒரு பெயரை சூர்யவன்ஷி நிலைநாட்டி வரும் வேளையில், பீகாரின் சமஸ்திபூரில் நடந்த ஒரு உள்ளூர் பயிற்சிப் போட்டியில் ஆசிர்வாத் அடித்த அற்புதமான சதம் இணையத்தில் வைரலாகியுள்ளது. தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணிக்காக விளையாடிய ஆசிர்வாத், 87 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார். அவரது ஆட்டத்தில் 20 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும், மேலும் அவரது இன்னிங்ஸின் ஸ்டிரைக் ரேட் 118.39 ஆக இருந்தது. 10 வயதான தன்னுடைய தம்பியின் ஆட்டத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார் சூர்யவன்ஷி.