சிவம் துபே
சிவம் துபே BCCI
கிரிக்கெட்

9 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்! ரஞ்சிக்கோப்பையில் சம்பவம் செய்த ஷிவம் துபே! 117 ரன்கள் குவித்து அபாரம்!

Rishan Vengai

ரஞ்சிக்கோப்பை தொடரின் 4ம் சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது நடைபெற்றுவரும் போட்டிகளில் நாகலாந்து, தமிழ்நாடு, ஹைத்ராபாத், ராஜஸ்தான், மத்திய பிரதேச அணிகள் வெற்றிப்பெற்றுள்ள நிலையில், தங்களுடைய 4வது வெற்றிக்காக போராடிவருகிறது மும்பை அணி.

இதுவரை தோல்வியே சந்திக்காமல் இருந்துவரும் மும்பை அணி, உத்தரபிரதேச அணிக்கு எதிராக போராடிவருகிறது. முதலில் விளையாடிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் புவனேஷ் குமார் தலைமையிலான உத்தரபிரதேசத்தின் பந்துவீச்சுதாக்குதலை சமாளிக்க முடியாமல் 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய உ.பி அணி, நிதிஸ் ரானாவின் அபாரமான சதத்தால் 324 ரன்கள் குவித்து, 126 ரன்கள் முன்னிலை பெற்றது.

86/6 என தடுமாறிய மும்பை அணி! தாங்கிப்பிடித்த சிவம் துபே!

126 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணிக்கு, டாப் ஆர்டர் வீரர்கள் 5 பேரையும் சொற்ப ரன்களில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தது உத்தர பிரதேச அணி. ஆகிப் கான் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த 67 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை அணி. உடன் களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானே ரன்அவுட்டாகி வெளியேற 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கே சென்றது மும்பை.

ஆனால் ஒருபுறம் நிலைத்து நின்று பொறுப்பை தனதாக்கி கொண்ட சிவம் துபே, லோயர் ஆர்டர் வீரர் முலானியுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபுறம் முலானி விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொள்ள, மறுமுனையில் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்ட சிவம் துபே ரன்களை எடுத்துவந்தார். 130 பந்துகளில் 9 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என பறக்கவிட்ட சிவம் துபே 117 ரன்கள் எடுத்து அசத்த, 7வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டது இந்த கூட்டணி.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உத்தர பிரதேச அணிக்கு பெரிய தடையாக இருந்த துபேவை, 117 ரன்னில் வெளியேற்றினார் கரன் சர்மா. தற்போது 303 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருக்கும் மும்பை அணி, 177 ரன்கள் முன்னிலையுடன் அணியின் வெற்றிக்காக போராடிவருகிறது.