ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை செய்யப்பட்டதன் மூலம் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சொத்து மதிப்பு அவர் இறந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது.
19ஆவது ஐபிஎல் சீசன், மார்ச் 28ஆம் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மறைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவுக்கு ராஜஸ்தான் ராய்லஸ் அணி, ரூ.460 கோடி லாபம் தந்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான கூட்டமைப்பு ரூ.15,285 கோடிக்கு (1.63 பில்லியன் டாலர்) வாங்கியுள்ளது. இந்த பிரம்மாண்டமான விற்பனை மூலம் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சொத்து மதிப்பு அவர் இறந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது.
2006-07இல் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை வென்றபிறகு ஷேன் வார்னே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2008இல் நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில், அவர் ராஜஸ்தான் அணியில் வீரராக மட்டுமல்லாமல், கேப்டனாகவும் வழிகாட்டியாகவும் இணைந்து மீண்டும் களத்திற்குத் திரும்பினார்.
அந்த ஆண்டு, ராஜஸ்தான் அணிக்கு ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்தார். அப்போது அவருக்கு 6,57,000 டாலர் அதாவது தற்போதைய மதிப்பில் 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.
இதுதவிர, அவர் விளையாடும் ஒவ்வொரு ஆண்டிற்கும் 0.75 சதவீத அணி பங்குகளை உரிமையாகப் பெறும் வகையில் ஒரு தனித்துவமான ஒப்பந்தத்தை அவர் செய்திருந்தார். மேலும், ராஜஸ்தான் அணியில் வார்னே நான்கு சீசன்கள் விளையாடி, தனது மொத்த பங்குரிமையை 3% ஆக உயர்த்திக்கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணியின் மதிப்பு 400 மில்லியன் டாலராக இருந்தபோது, வார்னேவின் பங்குகளின் மதிப்பு 12 மில்லியன் டாலராக இருந்தது. தனது பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் உயரும் என்பதை ஷேன் வார்னே அப்போதே கணித்திருந்தார். அதன்படியே, தற்போது அந்த அணியின் மதிப்பு 1.63 பில்லியன் டாலராக உச்சத்தைத் தொட்டுள்ளதால், வார்னேவின் 3 சதவீத பங்குகளின் மதிப்பு 48.9 மில்லியன் டாலராக அதாவது சுமார் 460 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் வார்னேவின் சொத்து மதிப்பு தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக மாறியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு உட்பட்ட இந்த பரிவர்த்தனை, 2026 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். வார்னேவின் இந்த முதலீடு, அவரது தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாகப் பார்க்கப்படுகிறது.