இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, உஸ்மான் தாரிக்கை இந்தியாவிற்கு எதிரான துருப்புச் சீட்டாகக் கருதுகிறார். தாரிக் தனது மர்ம சுழற்பந்து வீச்சால் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால், தற்போது அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், மழையின் அச்சுறுத்தலுக்கு இடையிலும் இந்தப் போட்டி நடக்கவிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, டி20 போட்டிகளில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. இதுவரை மோதிய 16 போட்டிகளில் இந்தியா 13 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, டி20 உலகக்கோப்பையில் இந்தியா 7 முறை வென்றுள்ளது, பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. பிரேமதாசா மைதானத்தில் 2023ஆம் ஆண்டு முதல் ஸ்பின்னர்களின் ரன் ரேட் 6.77 மட்டுமே என்பதால், பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மது, முஹமது நவாஸ், உஸ்மான் தாரிக் உள்ளிட்ட 4 பலமான ஸ்பின்னர்களைச் சமாளிப்பது இந்தியாவுக்கு சவாலே.
இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, ”பாகிஸ்தான் அணியில் உள்ள 15 வீரர்களில் உஸ்மான் தாரிக்கும் ஒருவர். நாங்கள் அவரை அப்படித்தான் நடத்துகிறோம். தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
அவரது பந்துவீச்சு குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருவதை நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. எங்கள் அணியின் முக்கிய துருப்புச் சீட்டு என அவரை கூறலாம். இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடுவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய பேசுபொருளாக இருப்பவர், பாகிஸ்தானின் மர்ம சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக். அமெரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான பிறகு, ஊர் முழுவதும் உஸ்மான் தாரிக் என்ற பெயர் மட்டுமே பேசுபொருளாக மாறிவிட்டது. அவரின் பந்துவீசும் முறை மற்றும் பவுலிங் ஆக்சனில் பாதியில் நிறுத்தி தாமதமாக பந்தைவீசுவது கிரிக்கெட் உலகில் ஒரு புயலையே உருவாக்கியுள்ளது.
தனது குறுகிய டி20 வாழ்க்கையில், தாரிக் 5.37 என்ற சிறந்த எகானமி உடன் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
சமீபமாக இந்திய பேட்ஸ்மேன்கள் கண்டிசனுக்கு ஏற்றார் போல் ஆடாமல் ஆக்ரோஷமாக ஆடி விக்கெட்டை இழப்பதால், உஸ்மான் தாரிக் தனது மர்மமான பந்துவீச்சால் இந்தியாவிற்கு சிக்கலை உருவாக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.