இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியும், நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த சூழலில் தான், 3வது மற்றும் கடைசிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், இந்தப் போட்டியுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா 11 ரன்களும், இரண்டாவது போட்டியில் 47 பந்துகள் விளையாடி 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதேபோல, கடந்த எட்டு ஒருநாள் போட்டிகளில், ரோஹித் ஒரு அரைசதத்துடன், 30.1 சராசரி மற்றும் 88.6 ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாக 241 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்தசூழலில் தான், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், பிசிசிஐ ரோகித் ஷர்மாவுக்கு வாய்ப்பு மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் 20 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. அதில், ஜெய்ஸ்வாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை இந்திய அணியில் விளையாட வைக்க இந்திய அணி முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, கடந்த வாரம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்கள் ரோகித்திடம் நீண்ட நேரம் பேசியுள்ளதாக தகவல் வெளியானது. இந்தசூழலில் தான், ரோகித் ஷர்மாவின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக லார்ட்ஸில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியே இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 2024-ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை தொடருடன் டி-20 ஃபார்மட்டில் ஓய்வு பெற்ற ரோகித் ஷர்மா, கடந்த 2025-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது, ஒருநாள் போட்டியிலும் ரோகித் ஷர்மா ஓய்வு பெறும் பட்சத்தில் அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார்.