\
MS Dhoni projected as next coach of CSK after Stephen Fleming's departure
ashwin, dhonix page

”தோனி இல்லாமல்..” அடுத்த கோச்சைத் தேடும் CSK? அஸ்வின் சொல்வது என்ன?

கடந்த 17 ஆண்டுகால அவரது பயிற்சியின்கீழ், சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளது.
Published on

17 ஆண்டுகாலமாக சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளராக இருந்த பிளமிங், தற்போது அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து, அடுத்த பயிற்சியாளரைத் தேடும் பணியில் சி.எஸ்.கே. ஈடுபட்டு வருகிறது. தோனியே அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்கிற தகவலும் பரப்பப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டான 2008-இல் ஒரு வீரராக சென்னை அணியில் இணைந்த பிளெமிங், அடுத்த ஆண்டான 2009 முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். கடந்த 17 ஆண்டுகால அவரது பயிற்சியின்கீழ், சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. இவரது வழிகாட்டுதலில் சென்னை அணி 12 முறை பிளே-ஆஃப் சுற்றுகளுக்குத் தகுதி பெற்றதோடு, 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளிலும் விளையாடியுள்ளது. இந்த நிலையில், சென்னை ரசிகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பிளெமிங், சிஎஸ்கே உடனான தனது 17 ஆண்டுகால பயிற்சியாளர் பதவியிலிருந்து தற்போது விலகியிருக்கிறார். இதையடுத்து, சி.எஸ்.கே. அணி, அடுத்த பயிற்சியாளரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தோனியே அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்கிற தகவலும் பரப்பப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய கருத்து வைரலாகி வருகிறது. அவர், “தோனி பயிற்சியாளராக வர சம்மதித்தால், அவரைவிடச் சிறந்த நபர் சிஎஸ்கேவுக்குக் கிடைக்கமாட்டார். ஆனால், அதற்கு அவர் விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற வேண்டும். காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் விளையாடாத தோனி, இன்னும் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. தோனிக்குத் துணையாக இருந்து, அவர் சொல்வதைக் கேட்டு வேலைகளைச் செய்யும் ஒருவரைக் கோச்சாக சிஎஸ்கே அணி தேடுகிறதா அல்லது தோனிக்கு இணையாகத் தனித்து நின்று முடிவெடுக்கும் ஒரு புதிய பயிற்சியாளரைத் தேடுகிறதா என்பதில் தெளிவு வேண்டும். சிஎஸ்கே இனிவரும் காலங்களில் தோனியின் வழிகாட்டுதலில் மட்டுமே இயங்கும் அணியாக இருக்கப் போகிறதா அல்லது புதிய பயிற்சியாளர் தனது விருப்பப்படி அணியை வழிநடத்தப் போகிறாரா என்பதைச் சிஎஸ்கே நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தோனி தற்போது சிஎஸ்கேவின் நிரந்தர கேப்டனாக இல்லாவிட்டாலும், அவர் அந்த அணியின் மிகவும் செல்வாக்குமிக்க நபராகத் தொடர்வதோடு, அணி தொடர்பான விவாதங்களிலும் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com