2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ.27 கோடிக்கு ஏலம்போன இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், ஐபிஎல் வரலாற்றில் அதிகவிலைக்கு சென்ற வீரராக இடம்பிடித்தார். அவரை ரூ.27 கோடிக்கு டெல்லி அணியிடமிருந்து தட்டித்தூக்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
ரிஷப் பண்ட்டின் வருகைக்கு பிறகு நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஸ், ஆயுஸ் பதோனி, அப்துல் சமாத், மயங்க் யாதவ், ரவி பிஸ்னோய் என 2025 ஐபிஎல் தொடருக்கு வலுவான அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மாறியுள்ளது.
இந்நிலையில் இன்று லக்னோ அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட்டின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்வாகம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு LSG அணியின் ஜெர்சியை பண்ட்டிற்கு உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து உரையாடலில் பேசிய சஞ்சிவ் கோயங்கா, ”பண்ட் ஐபிஎல்லின் சிறந்த கேப்டனாக நிச்சயம் மாறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தற்போது சிறந்த கேப்டன்களாக தோனி மற்றும் ரோகித்தின் பெயர் சொல்லப்படுகிறது, என் வார்த்தையை குறித்து வைத்து கொள்ளுங்கள் இன்னும் 10-12 வருடங்களுக்கு பிறகு சிறந்த கேப்டன்களாக தோனி, ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட்டின் பெயரும் சொல்லப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பின்பு பேசிய ரிஷப் பண்ட் கேப்டனாக ரோகித் சர்மாவின் குவாலிட்டியை பாராட்டியதோடு, அதிலிருந்து கற்றுக்கொண்டதாகவும் கூறினார். அதேநேரத்தில் தோனியின் வார்த்தைகளை பின்பற்றுவதாக தெரிவித்த பண்ட், “மஹி பாயின் வார்த்தைகள் மிகவும் பிரபலமானவை, எம்எஸ் தோனி 'உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாக செய்தால், அதற்கான முடிவுகள் தானாகவே பின்தொடரும்' என்று கூறியுள்ளார். நான் அதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.