2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இலங்கையில் போட்டியிடும் போது, ஒரு பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மேலும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் செய்த வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தானின் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்பட்ட நிலையில், அவ்வணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் சூப்பர் 8 போட்டிகளில் 3 ஆட்டத்தில் ஒன்றில் மட்டுமே வென்ற பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.
ஆசியாவில் நடத்தப்பட்ட உலகக்கோப்பையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய பாகிஸ்தான் அணியை, முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில், தற்போது அவர்களுக்கு மேலும் ஒரு தலைகுணிவு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது பெண் ஊழியர் ஒருவரிடம் பாகிஸ்தான் வீரர் ஒருவர் அத்துமீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையின் கண்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக பாகிஸ்தான் அணி தங்கியிருந்தபோது, பெண் ஊழியர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக பெயர் வெளிவராத ஒரு பாகிஸ்தான் வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிக்கைகளின் படி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி சூப்பர் 8 போட்டிக்கு முன்பாக இச்சம்பவம் நடந்துள்ளது. ஹோட்டலில் அறையில் பெண் ஊழியரிடம் பாகிஸ்தான் வீரர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்டுள்ளார், அப்பெண் கத்தி கூச்சலிட மற்ற ஊழியர்கள் வந்து பெண்ணை மீட்டுள்ளனர். பின்னர் இவ்விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் மேனேஜரிடம் சென்றுள்ளது, ஆனால் அவர் பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என வீரருக்காக மன்னிப்பு கேட்டதோடு, அபராதத்தையும் செலுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இவ்விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு தவறிழைத்த வீரருக்கு தண்டனை உறுதிசெய்யப்படும் என தெரிகிறது. இச்சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு மேலும் அவமானகரமான ஒன்றாக மாறியுள்ளது.