WPL வரலாற்றில் அதிகபட்ச டோட்டலை சேஸ் செய்து வரலாறு படைத்தது ஆர்சிபி. இதற்கிடையே, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான WPL இறுதிப் போட்டிக்கு முந்தைய இரவு RCB கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஏற்கெனவே சாம்பியன் ஆன பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது. 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில், ஜார்ஜியா வால் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் 2வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டினர். ஜார்ஜியா வால் 79 ரன்களும், மந்தனா 87 ரன்களும் அடித்து அசத்த கடைசி ஓவரில் 6 பந்துக்கு 10 ரன்கள் தேவையாக மாறியது. வெற்றி எந்த பக்கமும் போகலாம் என இருந்தபோது அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டிய ராதா யாதவ் அணியை இரண்டாவது கோப்பைக்கு அழைத்துச்சென்றார்.
WPL வரலாற்றில் அதிகபட்ச டோட்டலை சேஸ் செய்து வரலாறு படைத்தது ஆர்சிபி. தொடர்ந்து 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4வது முறையும் தோல்வியை சந்தித்து சோகமுகத்துடன் திரும்பியது. இந்த நிலையில், ஸ்மிருதியின் வெற்றிக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய ஜாம்பவானும் ஆர்சிபியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, “ஆர்சிபி கொடியை உயரத்தில் பறக்க விடுவது, நீங்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படக்கூடிய ஒன்று. ஸ்மிருதி மற்றும் முழு அணி மற்றும் நிர்வாகக் குழுவின் இந்த மகத்தான வெற்றிக்கு பெரிய வாழ்த்துகள். நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி இதற்கு தகுதியானவர்கள். இந்த தருணத்தை அனுபவித்து, அற்புதமான ரசிகர்களின் அன்பைத் தழுவுங்கள்” எனவும், அவ்வணியின் ஆல்ரவுண்டர் ஷ்ரேயங்கா பாட்டீல், ”கடந்த ஒன்றரை மாதங்களில் ஸ்மிருதி நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். எனவே இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வெற்றியை நான் அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்" எனவும் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான WPL இறுதிப் போட்டிக்கு முந்தைய இரவு RCB கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆர்சிபி பயிற்சியாளர் மலோலன் ரங்கராஜன், “ஸ்மிருதி எவ்வளவு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் 103 டிகிரி ஜுரத்துடன் இருந்தார். எனினும், RCB அணிக்காக விளையாட அவர் தீவிர முயற்சி எடுத்தார். அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆர்சிபி சாம்பியன் ஆனது குறித்துப் பேசிய ஸ்மிருதி மந்தனா, “மீண்டும், RCB ரசிகர்கள்தான் உலகின் சிறந்த ரசிகர்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எங்கு விளையாடினாலும், எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கிறது. இப்போதைக்குக் கூட, அவர்கள் காத்திருக்கிறார்கள். மீண்டும், நாங்கள் என்ன செய்தாலும் அவர்களுக்காகவே என்று நான் உணர்கிறேன் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆமாம், நான் சொல்ல வருவது, மூன்று ஆண்டுகளில் மூன்று பட்டங்களை அணி வென்றுள்ளது. இது அற்புதம்" என்று அவர் கூறினார்.