ராஜஸ்தான் ராயல்ஸ் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

RCB-க்கு முன்பே விற்பனை செய்யப்பட்ட RR அணி.. தட்டித் தூக்கிய அமெரிக்க தொழிலதிபர்!

RR அணி விற்கப்பட்டிருப்பதாகவும், அதை அமெரிக்க தொழிலதிபர் வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட் பேர்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் 15 சதவீதப் பங்குகளையும், லாக்லன் முர்டோக் 13 சதவீதப் பங்குகளையும் கொண்டிருந்தனர். மீதமுள்ள பங்குகள் தனிப்பட்ட முதலீட்டாளர்களிடையே பிரிக்கப்பட்டிருந்தன.

19ஆவது ஐபிஎல் தொடரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பல மாற்றங்கள் நடைபெறக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே அணிகளின் பயிற்சிகள் மற்றும் போட்டிகளுக்கு பிசிசிஐ நிறைய விதிமுறைகளை விதித்துள்ளது. இதற்கிடையே ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் விற்பனை பற்றிய செய்திகளும் வெளியாகி இருந்தன. தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆர்சிபி அணியை விற்றுவிட இருக்கும் அவ்வணியின் நிர்வாகம், அதற்கான இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதுபோலவே 2008ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனை செய்யப்படவிருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், ராஜஸ்தான் அணியின் பங்குதாரர்கள் நிறைய பேர் இருப்பதால் இது காலம் தாமதமாகலாகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

RR

இந்த நிலையில், அந்த அணி விற்கப்பட்டிருப்பதாகவும், அதை அமெரிக்க தொழிலதிபர் வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட் பேர்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் 15 சதவீதப் பங்குகளையும், லாக்லன் முர்டோக் 13 சதவீதப் பங்குகளையும் கொண்டிருந்தனர். மீதமுள்ள பங்குகள் தனிப்பட்ட முதலீட்டாளர்களிடையே பிரிக்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் தங்களது பெரும்பான்மையான பங்குகளை மட்டும் விற்கத் திட்டமிட்டிருந்த ராஜஸ்தான் அணி நிர்வாகம், சரியான விலை கிடைத்தால் அணியை முழுமையாக விற்கத் தயாரானது. அதற்காக, 9000 முதல் 12,000 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் கல் சோமானி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,285 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கல் சோமானி

உலகளாவிய முதலீட்டு வங்கியான ரெய்ன் குழுமத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம், தற்போது இறுதி வடிவம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. விளையாட்டுத் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட தொழில்முனைவோரான கல் சோமானி, ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் நிறுவனத்தில் ஒரு சிறுபான்மை முதலீட்டாளராக இருந்தார். இருப்பினும், வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ராப் வால்டன் மற்றும் என்.எஃப்.எல்லின் டெட்ராய்ட் லயன்ஸ் அணியின் உரிமையாளர்களான ஹாம்ப் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் கூட்டமைப்போடு ராஜஸ்தான் அணியை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது, இந்திய விளையாட்டுத் துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தனியார் பங்கு முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.