பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமது ஷெஹ்சாத், குல்தீப் யாதவ் விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும்,
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பரிதாப தோல்வியை அடைந்தது. இதனால், அதன் அரையிறுதி வாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு போட்டிகளுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், ரன் ரேட்டும் கணக்கிடப்படும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து அணியில் சொதப்பி வரும் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதும், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குல்தீப் யாதவ் களமிறக்கப்படாதது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமது ஷெஹ்சாத் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர், “குல்தீப் யாதவ், ஒரு மேட்ச் வின்னர். அவரை எப்படி அணியிலிருந்து வெளியேற்றினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது, சூர்யகுமார் அவரைக்கூட தள்ளினார். ஒழுங்கு நடவடிக்கை பிரச்னை அல்லது சூர்யகுமார் யாதவுடனான வாக்குவாதம் காரணமாகவே குல்தீப் யாதவ் நீக்கப்பட்டதாக இப்போது மக்கள் பேசுகிறார்கள். இல்லையெனில், அவர் வெளியேற்றப்பட்டிருக்க மாட்டார். குல்தீப் யாதவ் களத்தில் வெவ்வேறு பந்துகளை வீசி ஒரு மேட்ச் வின்னராகத் திகழ்கிறார்” என்றவர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீரின் அரசியல் குறித்தும் அவர் கடுமையாகச் சாடினார். “நீங்கள் எந்தத் துறைக்குள் நுழைந்தாலும், முழுக் கவனம் தேவை. கம்பீர் அரசியலில் நுழைந்த பிறகு, இயல்பாகவே அவரது மனநிலை மாறியது. அவர் அரசியலில் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. ஆனால் அதே அரசியலை அவர் அணி சூழலுக்குள் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகிறது. கௌதம் கம்பீரின் இந்த அரசியல் அனைத்தும் இந்திய அணியின் இமேஜை சேதப்படுத்திவிட்டது” எனச் சாடினார்.