டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹொசன் ஏதோ சொல்ல, அதற்கு அவ்வணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா, அவரை முறைத்ததுடன், தண்ணீர் பாட்டிலையும் ஓங்கி கீழே அடித்தார். இந்த காட்சி அங்கிருந்த மைதானத்தில் பதிவாகி இருப்பதுடன், தற்போது அது வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அடுத்தகட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடி முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முதலிடம் பிடித்த அணிகளான இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே ஆகியன குரூப் 1லும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் குரூப் 2விலும் இடம்பிடித்துள்ளன. முன்னதாக, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானைப் பந்தாடியது. இதனால், அவ்வணி நமீபியாவை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த நிலையில், கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் சல்மான் அலி ஆகா 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது, பயிற்சியாளர் மைக் ஹொசன் அவரிடம் ஏதோ கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த சல்மான் அலி ஆகா, பயிற்சியாளரை முறைத்துப் பார்த்தவாறே கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை ஓங்கி கீழே அடித்தார். ஆகாவின் இந்தச் செயலால் பயிற்சியாளர் சற்றே அதிர்ச்சியடைந்தார். மைதானத்தில் இருந்த கேமராக்களில் பதிவான இந்தக் காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோல்வி பயம் மற்றும் அழுத்தம் காரணமாகவே கேப்டன் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்களுக்குள் நடைபெற்ற மோதலை முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அமைதியாகப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். அவர் சங்கடத்துடன், பரிதாபமாக அமர்ந்திருந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி நிர்வாகம் குறித்து பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.