ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகன்தான் இந்த ஆர்யமான் பிர்லா. 28 வயதான இவர், உள்ளூர் கிரிக்கெட்டில் மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடிய ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.
19ஆவது ஐபிஎல் சீசன் வரும் 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால், அந்தத் தொடர் தொடங்கப்படுவதற்கு முன்பே, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் கைமாறப்பட்டுள்ளன. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு, 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 16,732 கோடி ரூபாய்) வாங்கியுள்ளது. இந்தக் கூட்டமைப்பில், டேவிட் பிளிட்சரின் 'போல்ட் வென்ச்சர்ஸ்' மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான 'பிளாக்ஸ்டோன்' ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டமைப்பு, இங்கிலாந்தைச் சேர்ந்த 'Diageo plc' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'United Spirits Limited' (USL)-உடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, RCB அணியின் (ஆண்கள் மற்றும் பெண்கள் WPL அணிகள் உட்பட) 100 சதவீத உரிமையையும் கையகப்படுத்தியது. இந்த கையகப்படுத்தலைத் தொடர்ந்து, ஆர்யமான் பிர்லா இவ்வணியின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகன்தான் இந்த ஆர்யமான் பிர்லா. 28 வயதான இவர், உள்ளூர் கிரிக்கெட்டில் மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடிய ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஆர்சிபி கேப்டன் ரஜத் பதிதார் ஆகியோருடன் இவர் ஆடை மாற்றும் அறையைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த இடதுகை மட்டையாளர், மத்தியப் பிரதேச அணிக்காக ஒன்பது முதல் தரப் போட்டிகளில் விளையாடி, ஈடன் கார்டன்ஸில் வங்காளத்திற்கு எதிராக அடித்த ஒரு சதம் உட்பட 414 ரன்கள் எடுத்தார். மேலும், நான்கு லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடி 36 ரன்கள் எடுத்துள்ளார். ஆர்யமான், ஐபிஎல் 2018 மெகா ஏலத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இருப்பினும், அவர் அந்த அணிக்காக ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை, மேலும் 2020 சீசனுக்கு முன்னதாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஆர்சிபி அணியின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
இந்தப் பொறுப்பு குறித்து ஆர்யமான் பிர்லா, “RCB-யின் வளர்ச்சியின் அடுத்தகட்டத்தை வடிவமைப்பதற்காக, இந்த கூட்டாண்மையில் ஒன்றிணைந்திருப்பது ஒரு சிறப்பான தருணமாகும். விளையாட்டு, ஊடகம் மற்றும் நுகர்வோர் சார்ந்த வணிகங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலை இந்தக் கூட்டாண்மை ஒன்றிணைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.