தோனி இதுநாள்வரை களமிறங்காததற்குப் பின்னணியில், அவரது காயம்தான் அதற்குக் காரணம் என சிஎஸ்கே நிர்வாகம் தொடர்ந்து கூறி வந்தாலும், அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் தற்போதைய அணியை கலைக்க தோனி விரும்பவில்லை என்கிற தகவலும் உலா வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடர், அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில்கூட களமிறங்கவில்லை. இன்னும் ஒரேயொரு லீக் போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த சீசன் முழுவதும் அவர் விளையாடாதது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
தோனி இதுநாள்வரை களமிறங்காததற்குப் பின்னணியில், அவரது காயம்தான் அதற்குக் காரணம் என சிஎஸ்கே நிர்வாகம் தொடர்ந்து கூறி வந்தாலும், அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் தற்போதைய அணியை கலைக்க தோனி விரும்பவில்லை என்கிற தகவலும் உலா வருகிறது.
ஆனால், தோனிக்கும் சிஎஸ்கேவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது என்கிற இன்னொரு தகவலும் வெளியாகி வருகிறது. இதனால் அவர், ‘இனிமேல் மஞ்சள் ஜெர்சியில் காணப்பட மாட்டார்’ என்றும் கூறப்படுகிறது. மூத்த வீரர்களை அணியிலிருந்து நீக்கியது தொடர்பாக தோனிக்கும் அணி நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தோனியிடம் அணி நிர்வாகம் எந்த ஆலோசனையும் செய்யவில்லை என்றும் அவரது அனுமதியின்றி எடுக்கப்பட்ட முக்கிய வீரர் பரிமாற்ற முடிவுகள் குறித்து அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் அதேநேரத்தில், எதிர்காலத்திற்காக ஓர் இளம் அணியை உருவாக்குவதில் அந்த அணி கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, தோனி அணியுடன் பயணம் செய்தபோதிலும், இளம் வீரர்கள் அணியில் இடம்பெறுவதற்காக, போட்டி நாட்களில் ஹோட்டலிலேயே தங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை மறைமுகமாக ரவிச்சந்திரன் அஸ்வினும் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி தொடர்பான செய்திகள் தீயாப் பரவி வரும் நிலையில், விரைவில் அதற்குப் பதில் கிடைத்துவிடும் என்கின்றனர், கிரிக்கெட் வல்லுநர்கள்.