ஆஸ்திரேலியா அணியின் மகளிர் கேப்டன் அலிசா ஹீலி, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல்முறையாக பந்துவீசினார். அவருடைய பந்துவீச்சு குறித்து அவரது கணவர் கிண்டலாகப் பேசினார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, அந்நாட்டு அணியுடன் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. முன்னதாக, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி, 3 போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரை இழந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதல்முறையாக பந்துவீசி அசத்தினார். இவர், ஆஸ்திரேலிய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவியாவார். மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 409/7 ரன்கள் குவித்தது. இதில், கேப்டன் அலிசா ஹீலி 98 பந்துகளில் 27 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உதவியுடன் 158 ரன்கள் எடுத்தார். பின்னர், இந்தியா பேட்டிங்கைத் தொடர்ந்தபோது, 33ஆவது ஓவரை அலிசா ஹீலி வீசினார்.
இதன்மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக பந்துவீசினார். அதில் ஒரு பவுண்டரியை விட்டுக் கொடுத்தார். இதையடுத்து, அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த அவரது கணவர் மிட்செல் ஸ்டார்க், நகைச்சுவையாய் கிண்டலடித்தார். ‘அது அவ்வளவு எளிதல்ல’ என அவர் தெரிவித்தார்.
அதாவது, எதிரணி பேட்டர்களுக்கு பந்துவீசுவது அவ்வளவு எளிதல்ல என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டார். எனினும், அவர் 2 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்தார். அதேநேரத்தில், அணியை வெற்றிபெற வைத்ததுடன், தொடரையும் கைப்பற்றினார். இதனால், அவருடைய ஒருநாள் போட்டியின் கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. ஆம், இந்தப் போட்டியுடன் ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார். தவிர, மார்ச் 6ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறார்.
2010ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர், அதேஆண்டில் அதே அணிக்கு எதிராக டி20யிலும், 2011ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டிலும் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகள் (2013, 2022), ஆறு ஐசிசி T20 உலகக் கோப்பைகள் (2010, 2012, 2014, 2018, 2020, 2023) எனப் பெற்றுத் தந்தவர் ஆவார்.