ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஒரு தலைசிறந்த பந்துவீச்சை கொண்டிருந்த பும்ரா, தனியாளாக ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
அதிலும் பும்ராவிடம் சிக்கிக்கொண்ட இரண்டு வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இருந்தனர். தொடர் முழுவதும் பும்ராவிற்கு எதிராக 4 பந்துகள் கூட மிட்செல் மார்ஷ் நிலைத்து நிற்கவில்லை, களத்திற்கு வருவதும் செல்வதுமாகவே இருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் 2024-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகள் வழங்கப்பட்டது. அதில் பங்கேற்ற மிட்செல் மார்ஸ் பும்ராவின் நைட்மேர் எப்படி தன்னுடைய வீட்டிலும் தொடர்ந்தது என்பதை நகைச்சுவையாக தெரிவித்தார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் பும்ராவிற்கு எதிராக மோசமாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 5வது டெஸ்ட் போட்டியில் மிட்செல் மார்ஸ் டிராப் செய்யப்பட்டார். ஆனால் பார்டர் கவாஸ்கர் டிராபி முடிந்தபிறகும், தன்னுடைய 4 வயது மருமகன் பும்ரா ஆக்ஷனோடு திரும்பிவந்து மீண்டும் தன்னை அவுட் செய்ததாக நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுவழங்கும் விழாவில் பேசியிருக்கும் மிட்செல் மார்ஷ், “எங்கள் வீட்டின் கொல்லைப் புறத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். என்னுடைய 4 வயது மருமகன் டெட் எனக்கு எதிராக பந்துவீசினார். அவர் ஓடிவரும்போது திடீரென பும்ராவின் ஆக்ஷனில் பந்துவீசினார். என்னுடைய நைட்மேர் அங்கேயும் தொடர்ந்தது” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
பும்ரா ஆஸ்திரேலியா மண்ணில் எந்த ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் செய்யாத அளவில் குறைவான பந்துவீச்சு சராசரியுடன் 9 இன்னிங்ஸ்களில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.