மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட்டில் ஒரு எமோஷன். அவரது அமைதியான அணுகுமுறை மற்றும் சாதனைகள் அவரை கோடிக்கணக்கான மக்களின் மனதில் நிலைத்திருக்கச் செய்துள்ளன. முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், தோனிக்கு இந்தியாவில் பிரதமருக்கு இணையான பாதுகாப்பு கிடைக்கிறது என்று புகழ்ந்தார்.
மகேந்திர சிங் தோனி.. இது வெறும் பெயர் மட்டுமல்ல.. அது ஒரு எமோஷன். ஒரு பெயரை சொன்னவுடன் உங்களுக்கு உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி உண்டானாலே நிச்சயமாக அவர் உங்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்துவிட்டார் என்றே அர்த்தம். அப்படி கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் இடம்பிடித்த பெயர் தான் எம்.எஸ்.தோனி. ஒரு கிரிக்கெட்டர் என்பதையும் தாண்டி மக்களின் மனதில் தோனி எப்படியோ இடம்பிடித்துவிட்டார். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வலம் வந்த பல ஜாம்பவான்களுக்கும் கிடைக்காத பெரும்பேறு என்றே சொல்லலாம்.
தோனியை எல்லோருக்கும் பிடிக்க காரணமே அவர் களத்தில் காட்டிய அணுகுமுறைதான். இந்திய கேப்டன்களில் பெரும்பாலானோர்கள் மிகவும் அக்ரஷிவ் அணுகுமுறையை கொண்டவர்கள்தான். கங்குலி, விராட் கோலி என சாதித்த பல கேப்டன்கள் அப்படித்தான் இருந்தார்கள். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒடிஐ உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 5 ஐபிஎல் கோப்பை என பல சாதனைகளை நிகழ்த்தி உச்சம் தொட்டவர் தான் தோனி. ஆனால், வெற்றியோ தோல்வியோ களத்தில் அவரது அணுகுமுறை பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வெற்றிப்பெற்றால் பெரிதாக கொண்டாடி தீர்த்ததும் இல்லை.. தோல்வி அடைந்தால் விரக்தி ஆகி மனம் உடைந்ததும் இல்லை. கோப்பையை வென்றுவிட்டு அதை மற்ற வீரர்களிடம் கொடுத்துவிட்டு கூலாக ஓரமாக ஒதுங்கி நிற்கும் அந்த சுபாவம் தான் பல ரசிகர்களின் மனதில் நங்கூரம் போல் அவரது பெயரை பொறித்தது.
இதனால் தான் தோனி ஓய்வுபெற்று 7 வருடங்கள் ஆனபிறகும் கூட, அவர் செல்லும் இடமெல்லாம் தற்போதும் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொள்கின்றனர். அவர் பேசும் வார்த்தைகள் தலைப்பு செய்திகளாக மாறுகின்றன, 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுவிட்டால் 'thala for a reason' என இந்திய கிரிக்கெட்டே கொண்டாடுகிறது.
இந்தநிலையில் தான் இந்தியாவில் தோனிக்கு கிடைக்கும் அளவுகடந்த புகழ் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.
ஸ்டிக் டு கிரிக்கெட் உரையாடலில் பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், ”இந்தியாவில் டி20 உலகக் கோப்பைக்காக தோனி பல இடங்களுக்குப் பயணம் செய்து, சில போட்டிகளின் போது மைதானத்திலும் இருந்தார். அப்போதெல்லாம் தோனிக்கு இந்தியாவில் மிகப்பெரிய கௌரவம் கிடைக்கிறது. சச்சினுக்குத்தான் இதுபோன்ற மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது, ஆனால் தற்போது தோனியும் அப்படியான நிலையில் இருக்கிறார். இந்தியாவில் அவருக்கு ஒரு பிரதமருக்குரிய பாதுகாப்பு உள்ளது. அவர் இந்தியா முழுவதும் எங்கு பயணம் செய்தாலும், அவருக்கு பாதுகாப்பாக உண்மையான ஆர்மி இருப்பது போலவே இருக்கிறது” என்று புகழ்ந்து பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் சாம் பில்லிங்ஸ், ‘தோனியுடன் ரெய்னா, ஃபேப் டூபிளஸி, ஜடேஜா போன்ற பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருந்தாலும், பொதுவெளியில் ஏர்போர்ட் என எங்கு சென்றாலும் தோனியை சுற்றியே ஆயிரம் பேர் இருப்பார்கள்’ என்று கூறினார்.