ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன் pt web
கிரிக்கெட்

“ஷாகிப் அல் ஹசன் மீது கற்கள் வீசக்கூடும்” மாத்யூஸின் சகோதரர் எச்சரிக்கை

Angeshwar G

கடந்த நவ.6 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரின் 38வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய இலங்கை அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி, 41.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Angelo Mathews

இதில் இலங்கை அணியின் பேட்டிங்கின் போது 24.2 ஓவர்களில் இலங்கை அணி 135 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. கடைசியாக சதீரா சமரவிக்ரமா விக்கெட்டை இழந்திருந்தார். இவருக்குப் பின் ஏஞ்சலா மேத்யூஸ் களம் இறங்க வேண்டும். அதாவது ஒரு விக்கெட் விழுந்த பிறகு புதிதாக களமிறங்கும் அல்லது ஏற்கெனவே களத்தில் உள்ள வீரர், அடுத்த 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் பந்தை எதிர்கொள்ள வேண்டும். தவறினால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படும்.

சமரவிக்ரமா ஆட்டமிழந்த பிறகு, மேத்யூஸ் களமிறங்கினார்.

ஆனால், அவர் அணிந்து வந்த ஹெல்மெட் சரியில்லாததால், மேத்யூஸ் அதை மாற்ற முயன்றார். ஆனால், கிரீஸிற்கு வர மேத்யூஸ் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டதாக வங்கதேச வீரர்கள் முறையிட, அவர் ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். அதாவது, கிரிஸுக்குள் வந்த மேத்யூஸ் மீண்டும் ஹெல்மெட்டை மாற்ற கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

Angelo mathews

இது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஷாகிப் அல் ஹசனை விமர்சித்து பல கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்களும் மேத்யூஸ்க்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேத்யூஸ் சகோதரர் ட்ரவின் மேத்யூஸ் ஷாகிப் அல் ஹசனை காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “நாங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளோம். கிரிக்கெட் போன்ற ஜெண்டில்மேன் விளையாட்டில் ஷாகிப் அல் ஹசன் மனிதாபிமானத்தை காட்டவில்லை.

விளையாட்டு வீரனுக்கு உரிய திறன் அவரிடம் இல்லை. ஷாகில் இலங்கைக்கு சர்வதேச போட்டிகள் அல்லது வேறு போட்டிகளில் விளையாட வந்தால் அவர்மீது கற்கள் வீசப்படும் அல்லது ரசிகர்களது எரிச்சலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர் இங்கு விளையாட வருவதை நாங்கள் விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.