கேஎல் ராகுல் சதத்தால் ரஞ்சிக்கோப்பை அரையிறூதிக்கு சென்றது கர்நாடகா web
கிரிக்கெட்

ரஞ்சிக்கோப்பை| காலிறுதியில் 130 ரன்கள் அடித்த கேஎல் ராகுல்.. மும்பையை வீழ்த்தி SEMI சென்ற கர்நாடகா!

2025-26 ரஞ்சிக்கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் மும்பையை தோற்கடித்து அரையிறுதிக்கு சென்றது கர்நாடகா அணி.

Rishan Vengai

ரஞ்சிக்கோப்பை காலிறுதியில் கர்நாடகா அணி மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. கேஎல் ராகுல் 130 ரன்கள் அடித்து அசத்தியதுடன், ஸ்மரன் ரவிச்சந்திரன் 83 ரன்கள் சேர்த்து வரலாற்று வெற்றியை பெற்றனர். கர்நாடகா அணி அரையிறுதியில் உத்தரகாண்ட் அணியை எதிர்கொண்டு விளையாடவுள்ளது.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடந்துவருகிறது. பரபரப்பாக நடந்துவந்த ரஞ்சிக்கோப்பை தொடர் காலிறுதி போட்டிகளை எட்டியுள்ளது.

காலிறுதிப்போட்டிகளில் வெற்றிபெற்ற உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் அணிகள் முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்று சாதனை படைத்தன.

இந்நிலையில் மற்றொரு காலிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

கேஎல் ராகுல் சதத்தால் கர்நாடகா வெற்றி..

மும்பையில் நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் 42 முறை கோப்பை வென்ற மும்பை அணியை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொண்டது கர்நாடகா அணி.

ஆனால் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கர்நாடகா பந்துவீச்சாளர்கள் 120 ரன்களுக்கு மும்பையை சுருட்டி அசத்தினர். தொடர்ந்து விளையாடிய கர்நாடகா அணியும் 173 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்ஸ் சுவாரசியம் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் விட்டதை இரண்டாவது இன்னிங்ஸில் பிடித்த மும்பை அணி 377 ரன்கள் குவித்து அசத்தியது. கர்நாடகா வெற்றிபெற 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அழுத்தம் நிறைந்த நேரத்தில் களத்தில் நிலைத்து நின்ற நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 130 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற ஸ்மரன் ரவிச்சந்திரன் 83 ரன்கள் அடித்து கர்நாடகாவை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

பலம் வாய்ந்த மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றுள்ள கர்நாடகா அணி, அரையிறுதியில் உத்தரகாண்ட் அணியை எதிகொண்டு விளையாடவிருக்கிறது.