சூர்யவன்ஷி - கபில்தேவ் web
கிரிக்கெட்

’வைபவ் சூர்யவன்ஷியிடம் டி20-ல் மட்டுமே திறமை உள்ளது..’ - கபில்தேவ் வைத்த குற்றச்சாட்டு

வைபவ் சூர்யவன்ஷி பற்றி நாம் மிகவும் பெரிதாக பேசுகிறோம், அவரை புகழாதீர்கள் என்று கபில்தேவ் பேசியுள்ளார்.

Rishan Vengai

15 வயதிலேயே ஐபிஎல் மூலம் கவனம் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் என கபில்தேவ் எச்சரிக்கிறார். அயர்லாந்து டி20 அறிமுகம் தள்ளிப்போன பின்னணியில், இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம் என்றாலும், இளம் வயதில் அவரை அளவுக்கு மீறி புகழ்வது சரியல்ல; அவருக்கு நேரம், இடம் கொடுக்க வேண்டும் என கூறுகிறார்.

முதல்தர கிரிக்கெட், யு19 இந்திய கிரிக்கெட்டை கடந்து ஐபிஎல்லிலும் தன்னுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 15 வயதிலேயே கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அயர்லாந்து டி20 தொடரிலேயே அவருடைய அறிமுகம் தள்ளிப்போனதற்கு பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

வைபவ் சூர்யவன்ஷி

இந்நிலையில் இங்கிலாந்து டி20 தொடரில் அவர் அறிமுகம் பெருவார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் வைபவ் சூர்யவன்ஷி மீதான எதிர்ப்பார்ப்பை வேண்டாம் என தவிர்த்துள்ளார்.

சூர்யவன்ஷி குறித்து சமீபத்தில் பேசியிருக்கும் கபில்தேவ், “சூர்யவன்ஷி ஒரு மாபெரும் திறமையாளர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், நாம் அவரைப் பற்றி மிகவும் பெரிதாகப் பேசுகிறோம் என்று நான் நினைக்கிறேன். தற்போதைக்கு அவருக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அவரை அவ்வளவாகப் புகழாதீர்கள். அவர் தற்போது இளம்வீரராக இருக்கிறார். எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் வயது அவருக்கு இன்னும் வரவில்லை.

வைபவ் சூர்யவன்ஷி

திறமையைப் பற்றிப் பேசினால், ஆம், அவர் சச்சின் மற்றும் விராட் கோலிக்கு நிகரானவர். அந்த அளவு திறமை அவரிடம் தெரிகிறது. ஆனால் அது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே. மற்ற வடிவங்களில், அவர் தன்னை நிரூபிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.