csk - jadeja web
கிரிக்கெட்

“CSK உடனான பிரிவு கடினமாக இருந்தது..” எமோசனாக பேசிய ரவீந்திர ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிரிந்தது உண்மையில் எமோசனலாக இருந்ததாக ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.

Rishan Vengai

2026 ஐபிஎல் முன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே டிரேட் செய்து, பதிலாக சஞ்சு சாம்சனை பெற்றது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. 2023 இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்தில் சிக்சர், பவுண்டரியால் 5வது கோப்பை வென்றுத் தந்த ஜடேஜா, இப்போது ராஜஸ்தானுக்காக சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாடி விக்கெட்டுகள் எடுத்து அணியை 127 ரன்களில் சுருட்டினார். பிரிவு எமோஷனல் என்றாலும், வாழ்க்கையின் பகுதி என அவர் கூறினார்.

2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஜடேஜாவை அணியிலிருந்து வர்த்தகம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவருக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை டிரேட் செய்தது. இந்த நகர்வு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 2 பந்துக்கு 10 ரன்கள் தேவையாக இருந்தபோது, கேப்டன் மகேந்திர சிங் தோனி கண்களை மூடிக்கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தார். ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியிருந்தனர். ஆனால் கடைசி 2 பந்துகளையும் சிக்சர், பவுண்டரி என அடித்த ஜடேஜா, சென்னை அணிக்கு 5வது கோப்பையை வென்று கொடுத்தார். வெற்றித் தருணத்தின் போது ஜடேஜாவை தோளில் தூக்கிவைத்து தோனி கொண்டாடியபோது, ஒட்டுமொத்த சென்னை அணி ரசிகர்களுமே தங்களுடைய தளபதியான ஜடேஜாவை தோளில் தூக்கிவைத்து கொண்டாடினர்.

ரவிந்திர ஜடேஜா

இந்தசூழலில் 13 ஆண்டுகள் அணியுடன் இருந்தவரை வேறொரு அணிக்கு சென்னை அணி தாரை வார்த்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது ஜடேஜாவும் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

சிஎஸ்கேவை பிரிந்தபோது எமோசனலாக இருந்தது..

2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடினார் ரவீந்திர ஜடேஜா. ராஜ்ஸ்தான் அணிக்காக விளையாடிய அவர் சர்பராஸ் கான் மற்றும் ஷிவம் துபேவின் விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையை 127 ரன்களில் சுருட்டினார்.

வெற்றிக்கு பின்னர் சிஎஸ்கே அணியிலிருந்து பிரிந்தது குறித்து பேசிய அவர், “சிஎஸ்கே அணி உடனான பிரிவு முதலில் கடினமாகவே இருந்தது. ஏனெனில் அந்த அணியுடன் 12-13 வருடங்களாக பயணித்துள்ளேன். அதனால் கொஞ்சம் எமோஷனலாக இருந்தது. ஆனால் இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என தேற்றிக் கொண்டேன். நான் முதன்முதலில் கோப்பை வென்ற அணிக்கே மீண்டும் திரும்புவதுதான் இதில் நல்ல விஷயம்" என்று பேசினார்.