சின்னசாமி ஸ்டேடியம் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

35,000 பேர் மட்டும்தான்.. நிபந்தனைகளுடன் சின்னசாமி மைதானத்திற்கு அனுமதி வழங்கிய அரசு!

2025 கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

Prakash J

2025 கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேசப் போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில், 35,000 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. இந்த பிரச்னையில் ஆர்சிபி அணி நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஆர்சிபி நிர்வாகம்.

rcb

மேலும், இதுகுறித்து விசாரிக்க நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. இந்தச் சூழலில், சின்னசாமி மைதானத்தில் இனிவரும் ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல் எந்தப் போட்டியும் நடத்தப்படாது என்றும், சின்னசாமி மைதானத்திற்கு பதிலாக வேறொரு மைதானம் கட்டப்படும் எனவும் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் 2026 ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி தங்களுடைய ஹோம் போட்டிகளை புனேவில் விளையாடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து மாநில ராமலிங்க ரெட்டி, "குன்ஹா அறிக்கையின்படி சில நிபந்தனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அவர் அறிக்கையில் அதிகபட்சமாக 35,000 பேர் மற்றும் பிற நிபந்தனைகளைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

DK Shivakumar

அதன்படி 35,000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள், மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ”இளைஞர்கள் மற்றும் கிரிக்கெட் உலகின் நலனுக்காக, கர்நாடக அரசு எதிர்காலத்தில் அனைத்து போட்டிகளையும் பெங்களூருவில் நடத்த அனுமதித்துள்ளது. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்தையும் அவர்கள் செயல்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.