இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால், போட்டி விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒலிம்பிக்கில் 2012ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றவரும், பேட்மின்டனில் உலக நம்பர் 1 தரவரிசையைப் பெற்ற ஒரே இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் சாய்னா நேவால். நீண்டகாலமாக முழங்கால் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் சாய்னா நேவால், ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்திவிட்டேன். என் விருப்பப்படி விளையாட்டில் நுழைந்து, என் விருப்பப்படியே வெளியேறினேன். அதனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தேன். உங்களால் விளையாட முடியவில்லையென்றால், அவ்வளவுதான். அது சரியே. என் குருத்தெலும்பு முற்றிலும் சிதைந்துவிட்டது. எனக்கு மூட்டுவலி உள்ளது. இதை என் பெற்றோரும், பயிற்சியாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் அவர்களிடம் 'இனி என்னால் விளையாட முடியாது, இது கடினம்' என்று கூறினேன். மெல்லமெல்ல சாய்னா விளையாடுவதில்லை என்பதை மக்களும் உணர்வார்கள். என் ஓய்வைப் பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. என் நேரம் முடிந்துவிட்டது என்றுதான் நான் உணர்ந்தேன். காரணம், என்னால் முன்புபோல் அதிக முயற்சி செய்ய முடியவில்லை, என் மூட்டு ஒத்துழைக்கவில்லை. உலக அளவில் சிறந்து விளங்க எட்டு முதல் ஒன்பது மணி நேரம் பயிற்சி செய்வோம். ஆனால், இப்போது என் மூட்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலேயே செயலற்றுப் போனது. அது வீங்கிவிட்டது, அதற்குப் பிறகு பயிற்சி மேற்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் போதும் என்று நினைத்தேன். என்னால் இதற்கு மேல் முயற்சி செய்ய முடியாது” என தனது ஓய்வு குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கத்தையும், 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும் பெற்று அவர் வலுவான மறுபிரவேசத்தை மேற்கொண்டாலும், தொடர்ச்சியான பிரச்னைகளால் அவதிப்பட்டார். 2024ஆம் ஆண்டு, தனக்கு மூட்டுவலி இருப்பதாகவும், முழங்கால்களில் குருத்தெலும்பு தேய்ந்திருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.