ind vs eng
ind vs eng cricinfo
கிரிக்கெட்

இதுக்கா இவ்ளோ பில்டப்பு! இங்கிலாந்தின் Bazball-க்கு End Card போட்ட இந்திய அணி - தொடரை வென்று அசத்தல்

Rishan Vengai

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஒரு வரலாற்று வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 1-0 என வெற்றிகரமாக தொடங்கியது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் கம்பேக் கொடுத்த இந்திய அணி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது. இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் ஆகியோரது அட்டகாசமான ஆட்டத்தால் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்தியா 2-1 என தொடரில் முன்னிலை பெற்றது.

தடுமாறிய இந்திய அணியை மீட்ட ஜுரேல்!

இந்நிலையில், தொடரின் 4வது டெஸ்ட் போட்டியானது முன்னாள் இந்திய கேப்டன் தோனி பிறந்த இடமான ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் அசத்தலான சதத்தால் 353 ரன்கள் குவித்தது. அதன்பிறகு விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து ஸ்பின்னர் ஷோயப் பஷீரின் அற்புதமான பவுலிங்கால் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

jurel

எப்படியும் இந்தியா இங்கிருந்து 200 ரன்களை எட்டுவதற்குள் ஆல்அவுட்டாகிவிடும் என்றே எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் களத்திலிருந்த இளம் வீரர் துருவ் ஜுரேல் வேறு திட்டத்தை வைத்திருந்தார். ஒரு அபாரமான ஆட்டத்தை விளையாடி 90 ரன்கள் அடித்து இந்தியாவை 307 ரன்களுக்கு எடுத்துச்சென்றார் ஜுரேல்.

அஸ்வின், குல்தீப்பால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து!

இந்தியா 307 அடித்த பிறகு 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஒரு பெரிய டோட்டலை இந்தியாவுக்கு எதிராக நிர்ணயிக்கலாம் என களமிறங்கிய இங்கிலாந்து அணியை, டக்கெட், ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் மூன்று பேரையும் சொற்ப ரன்களில் வெளியேற்றி கலக்கிப்போட்டார் ரவி அஸ்வின். அவரை தொடர்ந்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ் நிலைத்து நின்ற ஜாக் கிராவ்லி மற்றும் பென் ஸ்டோக்ஸை அடுத்தடுத்து வீழ்த்த இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது.

தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் 5 விக்கெட்டுகள் மற்றும் 4 விக்கெட்டுகள் என வீழ்த்த இங்கிலாந்து அணி 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்தியா வெற்றிபெற 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை விளையாடியது இந்திய அணி.

30 ஓவர்களுக்கு பிறகு பவுண்டரி விரட்டிய ஜுரேல்!

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அசத்தலான தொடக்கத்தை கொடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா அரைசதமும் அடித்து அசத்த முதல் விக்கெட்டுக்கே 84 ரன்களை எட்டி வலுவான நிலையில் இருந்தது இந்திய அணி.

rohit sharma

எப்படியும் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்று நினைத்த போது, யஷஸ்வியை ரூட்டும் கேப்டன் ரோகித்தை டாம் ஹார்ட்லியும் அடுத்தடுத்து வெளியேற்ற, அடுத்து களத்திற்கு வந்த ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் இருவரையும் 0 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டார் ஷோயப் பஷீர். ஜடேஜாவும் 4 ரன்களில் வெளியேற 120 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

ind vs eng

போட்டியில் ஏதோ திருப்பம் இருக்கும் என்று நினைத்தவேளையில், 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் மற்றும் ஜுரேல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜுரேல் களமிறங்கும் வரை 30 ஓவர்களாக ஒரு பவுண்டரியை கூட விரட்டாமல் அழுத்தத்துடன் விளையாடிய இந்திய அணியை, அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்டி பாசிட்டிவ் எண்ணத்திற்கு எடுத்துவந்தார் ஜுரேல். கடந்த இன்னிங்ஸில் 90 ரன்கள் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய கில் அரைசதம் அடித்து அசத்தினார். முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 4வது டெஸ்ட் போட்டியை வென்றது இந்திய அணி.

பாஸ்பாலுக்கு முடிவுகட்டிய இந்தியா!

4வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதை அடுத்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என தற்போதே கைப்பற்றி அசத்தியுள்ளது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 17 டெஸ்ட் தொடர்களை வென்று அசத்தியுள்ளது இந்திய அணி.

gill

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி பாஸ்பால் கிரிக்கெட்டை விளையாட ஆரம்பித்த பிறகு முதல் முறையாக ஒரு டெஸ் தொடரில் தோல்வியை தழுவியுள்ளது. பாஸ்பால் கிரிக்கெட்டால் உலக கிரிக்கெட்டை அதிரவைத்த இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்பமான விளங்கியுள்ளது இந்தியா.

gill - jurel

மூத்தவீரர்களான கோலி, பும்ரா, ஷமி, கேஎல் ராகுல் முதலிய வீரர்கள் இல்லாமல் யஷஸ்வி, ஜுரேல், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் முதலிய வீரர்களை வைத்து தொடரை வென்று அசத்தியுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. ப்ரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்திய பிறகு அவ்வணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

ben stokes

இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி நடைபெறவிருக்கிறது.