இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணி ஆப்கானிஸ்தான் ஏக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான நிலையைப் பெற்றுள்ளது. தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக விளையாடினர். சூர்யவன்ஷி 9 பவுண்டரிகளுடன் 44 ரன்கள், பிரப்சிம்ரன் 84 ரன்கள் சேர்த்தார். ருதுராஜ் கெய்க்வாட் 66, கேப்டன் திலக் வர்மா அரைசதம் அடித்து அணியை முன்னேற்றினர்.
இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது.
முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக 277 ரன்கள் அடித்த இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தசூழலில் இந்தியா ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றுவருகிறது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 200 ஸ்டிரைக்ரேட்டில் 9 பவுண்டரிகளை சிதறடித்த சூர்யவன்ஷி 44 ரன்கள் அடித்து அவுட்டாக, சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட பிரப்சிம்ரன் 84 ரன்களில் வெளியேறினார்.
கடந்தபோட்டியில் சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் 66 ரன்கள் அடித்து அசத்த, இறுதிவரை களத்தில் நின்று அரைசதமடித்த கேப்டன் திலக் வர்மா இந்தியாவை 300 ரன்களுக்கு மேலான டோட்டலுக்கு அழைத்துச்சென்றார். மழையால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் இந்திய அணி 47 ஓவர் முடிவில் 328 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது.