2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணி மீண்டும் வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை, இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் தங்களது உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஹர்திக் பாண்டியாவும் தேசியக் கொடியை தன் தோளில் அணிந்துகொண்டு தனது பெண் தோழியான மஹிகா சர்மாவுடன் வெற்றியைக் கொண்டாடினார். இது, சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்டியா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது. அதன்மூலம் 3 முறை டி20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி, ஹோம் கிரவுண்டில் டி20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி, அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 கோப்பை வென்ற முதல் அணி என 3 உலக சாதனைகளை படைத்து அசத்தியது. இந்த வெற்றிக்குப் பின்னால் இந்திய அணியின் ஒட்டுமொத்த உழைப்பும் இருக்கிறது. அபிஷேக், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா என தொடர் முழுவதும் ஒவ்வொருவரும் தங்களது திறமையை நிரூபித்தனர். ஒவ்வொரு போட்டியிலும் ஓவ்வொரு மேட்ச் வின்னர்கள் உருவாகினர். அதன் பயனே இந்திய அணி கோப்பையை கையில் ஏந்தியது. இதனால், இந்திய அணியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக, இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை இந்திய வீரர்கள் நம் நாட்டுத் தேசியக்கொடியுடன் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவும் தேசியக் கொடியை தன் தோளில் அணிந்துகொண்டு தனது பெண் தோழியான மஹிகா சர்மாவுடன் வெற்றியைக் கொண்டாடினார். இது, சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்டியா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அவர் காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளார். சிவாஜி நகர் காவல் நிலையத்தில் ஹர்திக் மீது புகார் அளித்துள்ள வழக்கறிஞர் வாஜித் கான், ”ஹர்திக் பாண்ட்யா தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக தனது காதலியுடன் நடனமாடினார். தேசியக் கொடி அவரது முதுகில் சுற்றப்பட்டிருந்தது. 1971 தேசியக் கொடிச் சட்டத்தின் பிரிவு 2இன் படி, அதன் கண்ணியத்தை நாம் மதிக்க வேண்டும். இருப்பினும், ஹர்திக் பாண்டியா தனது வெற்றியைக் கொண்டாடுவதில் சந்தோஷமாக இருந்ததால், அவர் தனது காதலியுடன் தேசியக் கொடியை அணிந்து படுத்துக் கொண்டார். இது தேசியக் கொடியை அவமதிப்பதாக நான் நம்புகிறேன். ஆகையால், நான் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் அவர்மீது புகார் அளித்துள்ளேன்” என ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, ஹர்திக் பாண்டியா தனது பெண் தோழியுடன் நடனமாடுவது, கோப்பையுடன் போஸ் கொடுப்பது மற்றும் கொண்டாட்டங்களின் மத்தியில் உணர்ச்சிகரமான தருணங்களைப் பகிர்ந்துகொண்டது, தவிர இந்த ஜோடி மேடை அமைப்பில் ஒன்றாக படுத்துக் கிடந்தது உள்ளிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.