டக்கெட் - பெத்தெல் cricinfo
கிரிக்கெட்

3வது ODI| பும்ரா இல்லாமல் சல்லி சல்லியாக நொறுங்கிய இந்தியா.. 387 ரன்கள் குவித்த இங்கிலாந்து!

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 387 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி.

Rishan Vengai

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் பும்ரா இல்லாமை இந்திய பவுலிங்கை பலவீனப்படுத்த, டாஸ் வென்ற இங்கிலாந்து தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தியது. பெத்தெல்-டக்கெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தது. டக்கெட் சதம், ஜோ ரூட் அரைசதம், பட்லரின் அதிரடி இணைந்து 50 ஓவரில் 387 ரன்கள் குவித்தனர். இந்தியா முன் 388 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், தொடரை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா விளையாடவில்லை, துபேவிற்கும் ஓய்வளிக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடிய நிலையில், பும்ரா இல்லாததால் இந்திய பவுலர்களால் தொடக்கத்திலேயே விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

டக்கெட்

தொடக்க வீரர்களாக களமிறங்கிய பெத்தெல் மற்றும் டக்கெட் இருவரும் அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்த முதல் விக்கெட்டுக்கே 192 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து அணி. சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட பெத்தெல் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டக்கெட் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து அசத்தினார். டக்கெட் 141 ரன்கள், ஜோ ரூட் 74 ரன்கள், ஜோஷ் பட்லர் 13 பந்தில் 41 ரன்கள் என அசத்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 387 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

388 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை நோக்கி இந்தியா செல்ல உள்ள நிலையில், ரெக்கார்ட் சேஸிங்கை ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சாத்தியப்படுத்துமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.