ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டான 2008-இல் ஒரு வீரராக சென்னை அணியில் இணைந்த பிளெமிங், அடுத்த ஆண்டான 2009 முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். கடந்த 17 ஆண்டுகால அவரது பயிற்சியின் கீழ், சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. எனினும், கடந்த 3 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத காரணத்தால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் விலகினார் ஸ்டீபன் பிளெமிங். இரு தரப்புக்கும் இடையே நடந்த சுமுகமான மற்றும் நேர்மையான ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த பரஸ்பர முடிவு எட்டப்பட்டதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியை கடந்த இரண்டு மாதங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் செய்தாலும், தற்போது வரை இதற்கு ஒரு முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது. இந்தநிலையில் தான், அடுத்த ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வரும் என தெரிகிறது. முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி (Hemang Badani), ஸ்டீபன் பிளெமிங்கிற்கு அடுத்த தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அணி நிர்வாகத்தை பொறுத்தவரை இயான் மார்கன் அணியின் பயிற்சியாளராக வர வேண்டும் என விரும்பினாலும், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவை இந்தியர்களை மையமாகக் கொண்டு அமைக்க வேண்டும் என தோனி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஹேமங் பதானி அந்த வரிசையில் முன்னிலையில் வந்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் மட்டுமின்றி, தென்னாப்பிரிக்காவின் எஸ்.ஏ 20, சர்வதேச டி20 லீக் மற்றும் எல்.பி.எல். போன்ற டி20 தொடர்களிலும் பதானி பட்டங்களை வென்றுள்ளார். மேலும், தமிழ்நாடு அணிக்காக விளையாடியுள்ளதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் சூழல் மற்றும் ஆடுகள நிலைமைகள் குறித்தும் அவருக்கு அனுபவம் உள்ளது. சமீப ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி தடுமாறிய நிலையில், புதிய பயிற்சியாளர் அந்த ஆடுகளங்களைச் சரியாக கணித்து அணியை கட்டமைப்பது முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இருப்பினும் பிளெமிங் நீண்ட காலமாக அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த நிலையில், வெளிநாட்டு பயிற்சியாளரே அணிக்கு பொருத்தமாக இருப்பார் என்ற கருத்தும் நிர்வாகத்திற்குள் இருப்பதாகவும், இதனால் இந்திய பயிற்சியாளர் மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் என இரு வாய்ப்புகளையும் சிஎஸ்கே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இதுமட்டும் இல்லாமல் தோனியின் முக்கிய நிபந்தனையாக புதிய தலைமைப் பயிற்சியாளர் சிஎஸ்கே அணிக்காக முழுநேரமாகவும், பிரத்யேகமாகவும் பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பல டி20 லீக் தொடர்களில் ஒரே பயிற்சியாளர் வெவ்வேறு அணிகளுக்குப் பணியாற்றுவது வழக்கமாக உள்ள நிலையில், இந்த நடைமுறையை சிஎஸ்கேவில் மாற்ற தோனி விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதனால் வரும் பயிற்சியாளருக்கு ஏற்கனவே வழங்கப்படும் தொகையை விட அதிக தொகையை வழங்க வேண்டிய கட்டாயம் அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தான், இதற்கு எல்லாம் இரண்டு வாரங்களில் முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.