நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நடப்பாண்டின், 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழா 4ஆவது முறையாக ஸ்காட்லாந்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில், 72 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடக்க விழா நடைபெறுகிறது. இந்திய அணிக்கு பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.
விளையாட்டு உலகில் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி. இதற்கு அடுத்த விழாவாகப் பார்க்கப்படுவது காமன்வெல்த் போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டி, நடப்பாண்டில், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று முதல் தொடங்க உள்ளது. இது, ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 23ஆவது காமன்வெல்த் விளையாட்டு 4ஆவது முறையாக ஸ்காட்லாந்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன், 2 முறை (1970, 1986) எடின்பர்க், ஒரு முறை (2014) கிளாஸ்கோவில் நடந்தது.
காமன்வெல்த் விளையாட்டை அதிக முறை நடத்திய நாடுகளுக்கான பட்டியலில் 2ஆவது இடத்தை கனடாவுடன் (1930, 1954, 1978, 1994) பகிர்ந்து கொண்டது ஸ்காட்லாந்து. இரு அணிகளும் தலா 4 முறை இப்போட்டியை நடத்தின. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (5 முறை, 1938, 1962, 1982, 2006, 2018) உள்ளது. மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த போட்டியில், 72 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
கபான், டோகோ நாடுகள் கடந்த 2022இல் காமன்வெல்த் அமைப்பில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது முதன்முறையாக காமன்வெல்த் விளையாட்டில் களமிறங்குகின்றன. முன்னதாக, இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற இருந்தது. ஆனால் அதிக செலவினத்தை காரணம் காட்டி ஆஸ்திரேலியா பின்வாங்கிவிட்டது. அதன்பிறகே, இதையடுத்து போட்டியை நடத்தும் வாய்ப்பு ஸ்காட்லாந்துக்கு வழங்கப்பட்டதுடன், நிறைய போட்டிகள் அதிரடியாக நீக்கப்பட்டன.
இந்த போட்டிக்கு ஸ்காட்லாந்து ரூ.2 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது செலவினம் 60 சதவீதம் குறைவாகும். இதில் தடகளம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3×3), ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிளிங், ஜூடோ, நெட்பால், பவுல்ஸ் ஆகிய 10 விளையாட்டுகளில் 215 பந்தயங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாரா பிரிவினருக்கான 6 பந்தயங்களும் அடங்கும்.
இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் என மொத்தம் 126 பேர் கொண்ட அணி 8 விளையாட்டுகளில் களம் காணுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ் லினா மற்றும் ஜாஸ்மின் லம்போரியா, பிரீத்தி பவார், தமிழகத்தின் விஷால், உயரம் தாண்டுதல் வீரர் சர்வேஷ் குஷாரே, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர், குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால் சிங், வட்டு எறிதல் வீராங்கனை சீமா கலிரம்மா, ஜூடோ வீராங்கனை துலிகா மான் உள்ளிட்டோர் பதக்கம் வெல்லும் வாய்ப்பில் இருக்கிறார்கள். இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடக்க விழா நடைபெறுகிறது. இந்திய அணிக்கு பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களை அறுவடை செய்து 4-ஆவது இடத்தைப் பிடித்தது. ஆனால், கடந்த முறை இடம்பெற்றிருந்த பேட்மிண்டன், கிரிக்கெட், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட் டுகள் இந்த சீசனில் இல்லை. இதனால், இந்தியாவின் பதக்க வேட்டைக்குப் பாதிப்பு உண்டாகியுள்ளது. இதேபோல் தொடர்ந்து 2-ஆவது முறையாக துப்பாக்கி சுடுதலுக்கும் இடம் மறுக்கப்பட்டுள்ளது.