Rohit Sharma - childhood coach Dinesh Lad
Rohit Sharma - childhood coach Dinesh Lad web
கிரிக்கெட்

“உனக்கு என்ன பைத்தியமா ரோகித்?” Rohit-குறித்து அரிதான கதையை வெளிப்படுத்திய சிறுவயது பயிற்சியாளர்!

Rishan Vengai

ஐபிஎல் டி20 லீக் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர் ரோகித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லாத போது, ரோகித் சர்மா தன்னுடைய முதல் ஐபிஎல் கோப்பையை வைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவையே சேரும்.

முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய ரோகித் சர்மா, 2009ம் ஆண்டு தன்னுடைய முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார். அதன்பிறகு 2011ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர், 2013ல் கேப்டன் பொறுப்பை ஏற்று 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 என 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பை வென்று கொடுத்துள்ளார். ஆனால் இன்று அவரையே கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேற்றியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, அவரை ஒரு வீரராக மட்டுமே விளையாடுமாறு நிர்பந்தித்துள்ளது.

rohit sharma

இந்நிலையில் இந்தியாவின் மூன்று வடிவ கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, தன்னுடைய இளம் வயதில் எந்தளவு தன்மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்ற அரிதான கதையை அவருடைய சிறுவயது பயிற்சியாளரான தினேஷ் லாட்.

உனக்கு என்ன பைத்தியமா ரோகித்? என்னால முடியும் சார்!

2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக எஸ்ஆர்ஜி ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் ரோகித்தின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட், இந்திய கேப்டனின் தன்னம்பிக்கை குறித்து பேசியுள்ளார்.

இந்திய கேப்டனைப் பற்றி அதிகம் அறியப்படாத கதையைப் பகிர்ந்து கொண்ட அவர், “ரோகித் அப்போது தான் யு-19 மும்பை அணியில் இடம்பிடித்திருந்தார். ஒருமுறை நானும் ரோகித்தும் மெர்சிடிஸ் காரைப் பார்த்தபோது, ​​“சார், இந்த காரை நான் ஒரு நாள் வாங்குவேன்” என்று ரோகித் கூறினார். அப்போது நான் அவரிடம், 'உனக்கு பைத்தியமா? இவை மிகவும் விலை உயர்ந்தவை” என்றேன். ஆனால் அதற்கு என்னிடம் "சார், நான் அதை நிச்சயம் வாங்குவேன், நீங்கள் பாருங்கள்" என்று கூறினார். அந்த வயதிலேயே அவருடைய நம்பிக்கை மிகவும் அதிகமாக இருந்தது" என்று லாட் கூறியுள்ளார்.

2008 ஐபிஎல் ஏலத்தில் டெக்கான் சார்ஜர் அணியில் ரூ.4.8 கோடிக்கு ரோகித் ஏலத்தில் எடுக்கப்பட்டார். பின்னர் 2011 மெகா ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்து கேப்டனாக தக்கவைத்து கொண்டது. தற்போது ரோகித் மும்பை அணியில் ஒரு வீரராக தொடர்வாரா, இல்லை வேறு ஏதேனும் முடிவு எடுப்பாரா என்ற சூழல் நிலவிவருகிறது. எப்படியிருப்பினும் 2024 டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.