பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 152 ரன்னுக்கு சுருட்டியது இங்கிலாந்து அணி. ஜோஷ் டங் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை திணற வைத்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 11 நாட்கள் முடிவிலேயே 0-3 என தோற்ற இங்கிலாந்து 16வது ஆண்டாக ஆஸ்திரேலியாவில் தொடரை இழந்துள்ளது.
தோல்வியால் ஒரு பக்கம் இங்கிலாந்து அணி பெரிய அடியை சந்தித்திருக்கும் நிலையில், 2வது டெஸ்ட் மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கு இடையேயான நாட்களில் ரிசார்ட்டில் அளவுக்கு அதிகமாக குடித்த இங்கிலாந்து வீரர்கள் 4 நாட்களாக போதையில் தள்ளாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குடிபோதையில் இருப்பிடம் செல்ல வழிதெரியாமல் சுற்றிய பென் டக்கெட்டின் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தசூழலில் ஒரு போட்டியிலாவது இங்கிலாந்து வெற்றிபெறுமா என்ற எதிர்ப்பார்ப்பில் இன்று 4வது டெஸ்ட் போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்துவருகிறது.
குடித்துவிட்டு சரியாக பயிற்சி எடுக்காததால் தான் இங்கிலாந்து அணியால் 3வது டெஸ்ட்டில் சரியாக விளையாட முடியவில்லை என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இன்று பாக்ஸிங் டே டெஸ்ட்டான 4வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் மோதிவருகின்றன.
மெல்போர்ன் மைதானத்தில் இன்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஷ் டங் அதிர்ச்சி கொடுத்தார். 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய தடுமாறிய நிலையில், கைக்கோர்த்த கவாஜா மற்றும் கேரி இருவரும் அணியை மீட்டுவர போராடினர்.
ஆனால் மீண்டும் பந்துவீச்சில் அசத்திய ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா.