ஐபிஎல் வரலாற்றில் 49 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன ஆர்சிபி சாதனை இன்னும் உடைக்கப்படாமல் தொடர்கிறது. கேரளா கிரிக்கெட் லீக் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான கொச்சி புளூ டைகர்ஸ் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் டக் அவுட் ஆனாலும், அணி 7 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்து ஆர்சிபியின் 49 ரன் சாபத்தை SAFE ஆக்கியது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு பிறகு 3வது வெற்றிகரமான அணியாக இருந்தபோதும், 17 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத ஒரே காரணத்தால் சோக்கர்ஸ் அணி என்ற டேக்லைன் மூலம் ட்ரோல் செய்யப்பட்டது ஆர்சிபி. அதற்குபிறகு 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு என தொடர்ச்சியாக இரண்டு கோப்பைகளை வென்றிருக்கும் ஆர்சிபி அணிக்கு எதிராக, இன்னமும் ட்ரோல் மெட்டீரியலாக வைக்கப்படும் ஒரு விசயம் என்றால் 49 ரன்னில் ஆல் அவுட்டான சம்பவம் தான்.
எந்த ஒரு சர்வதேச போட்டியாக இருந்தாலும் சரி, லீக் போட்டிகளாக இருந்தாலும் சரி குறைவான ரன்களில் விக்கெட்டுகள் சரியும்போதெல்லாம், ஆர்சிபி அணியும் 49 ரன்கள் ரெக்கார்டும் ட்ரெண்டிங்கில் வந்துவிடுகின்றன.
அந்தவகையில் தான் நேற்று நடைபெற்ற கேரளா கிரிக்கெட் லீக் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் கொச்சி புளூ டைகர்ஸ் அணியின் டாப் 5 வீரர்கள் அனைவரும் 0 ரன்னில் வெளியேறிய மோசமான சம்பவம் நடைபெற்றது. கடந்த 26ஆம் தேதி கொச்சி புளூ டைகர்ஸ் மற்றும் ஆலப்புழா ரிப்பிள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டு 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆலப்பே அணி 7 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்து மிரட்டியது. 42 பந்தில் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணியில், அவர்களின் டாப் 5 வீரர்கள் அனைவரும் 0 ரன்னில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அனைத்துவிதமான டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு அணியின் டாப் 5 வீரர்கள் அனைவரும் டக் அவுட்டில் வெளியேறிய சம்பவம் முதல்முறையாக அரங்கேறியது.
1 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 12 ரன்னுக்கு 5வது, 6வது விக்கெட்டையும், 19 ரன்னுக்கு 7வது விக்கெட்டையும் இழந்து படுமோசமாக சறுக்கியது. இந்தசூழலில் ஆர்சிபி அணியின் 49 ரன்கள் ரெக்கார்ட் உடைக்கப்படும் என்ற சூழல் உருவானது. ஆனால் முதல்வரிசையில் களமிறங்கிய 5 வீரர்கள் டக் அவுட்டான பிறகும், 19 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தபிறகும் கொச்சி புளூ டைகர்ஸ் அணி 7 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 51 ரன்களை சேர்த்தது. இதனால் ஆர்சிபி அணியின் வசமிருக்கும் 49 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற மோசமான ரெக்கார்ட் இன்னமும் அவர்களிடமே தொடர்கிறது.
டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை நடக்காத டாப் 5 வீரர்கள் அனைவரும் டக் அவுட் என்ற மோசமான சம்பவம் நடந்தபோதும் 49 ரன்கள் என்ற ஆர்சிபியின் சாதனை உடைக்கப்படாதது மீண்டும் ட்ரோலாக மாறியுள்ளது. ஆர்சிபியின் இந்த சாபமான 49 ரெக்கார்டை அந்த அணியே உடைக்கும் ஒரு சூழல் கடந்த ஐபில்லில் உருவானது. ஆனால் பவுலர்களின் சேஃப்டிக்காக அந்த இலக்கை துரத்தாமல் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல திட்டமிட்டது.
இந்தசூழலில் சிறப்பாக விளையாடிவரும் ஆர்சிபி அணியே வேறொரு அணியை 49 ரன்னுக்குள் ஆல்அவுட்டாக்கி, அவர்களின் மோசமான ரெக்கார்டை விரைவில் உடைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.