12 வயதிலேயே பீகார் மாநில அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, 13 வயதிலேயே ஐபிஎல் அணியால் ஏலத்துக்கு எடுக்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வரும் அவர் தனது அதிரடி ஆட்டத்தால் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். தனது முதல் ஐபிஎல் போட்டியில், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அவர், தற்போது வரை உலகின் அத்தனை முக்கிய பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் சிதறடித்து வருகிறார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 36 பந்துகளில் அவர் சதமடித்தது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி தனது கிரிக்கெட் பேட்டில் சக்தியை உருவாக்க செயற்கை நுண்ணறிவு சிப்பைப் பயன்படுத்துவதாக கிரிக்கெட் நிபுணர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் நிபுணரான நௌமேன் நியாஸ் என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, உங்களுக்கு 18 வயதாக இருக்கும்போது உங்களால் இதுபோன்ற ஒரு ஆட்டத்தை ஆடமுடியாது என்றும், சூர்யவன்ஷியிடம் சக்தி வாய்ந்த ஆட்டத்தை விட நுட்பம்தான் அதிகம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், அவரின் ஆட்டம் அசாதாரணமானது என்றும் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனைகளை நடத்துவது போல, சூர்யவன்ஷியின் பேட்டை ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியுளர். அதோடு அவர் தனது பேட்டில் ஒரு செயற்கை நுண்ணறிவு சிப்பைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அதன் மூலமே இதுபோன்ற சக்திவாய்ந்த ஷாட்களை அவர் ஆடுகிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.