இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒரே டெஸ்டில், முல்லன்பூரில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட்டுக்கு 540 ரன்கள் குவித்து விளையாடிவருகிறது. கேஎல் ராகுல், கேப்டன் சுப்மன் கில் சதமடித்து அசத்த, ரிஷப் பண்ட் 81 ரன்கள் சேர்த்தார். வாசிங்டன் சுந்தர் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் பக்கம் முகமது சலீம் சஃபி 5 விக்கெட் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நேற்று முல்லன்பூர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் நாள் முடிவில் 368 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2ஆம் நாள் ஆட்டத்தில் 81 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட்டின் ஆட்டம் மூலம் 500 ரன்களை எட்டியுள்ளது இந்தியா. மனவ் சுதர், முகமது சிராஜ் என அனைத்துவீரர்களும் நன்றாக பேட்டிங் செய்ய தற்போதுவரை 8 விக்கெட் இழப்புடன் 540 சேர்த்துள்ளது இந்தியா. களத்தில் வாசிங்டன் சுந்தர் 37 ரன்களுடன் விளையாடிவருகிறார்.
ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை பொறுத்தவரையில் தனியாளாக அசத்திய முகமது சலீம் சஃபி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.