சமீபத்திய பார்டர் கவாஸ்கர் தொடரில் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. பேட்ஸ்மேனாக 5 இன்னிங்ஸில் 31 ரன்களை மட்டுமே ரோகித் எடுத்துள்ளார்.
கேப்டனாகவும் அவரது செயல்பாடுகள் மோசமாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சம்மந்தமே இல்லாத பிளேயிங் 11, எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பவுலர் என்பதில் சரியாக முடிவெடுக்காதது, 11வது வீரருக்கு கூட பவுண்டரி லைனில் ஃபீல்டரை நிறுத்துவது என எடுக்கும் அத்தனை முடிவுகளையும் படுமோசமானதாக ரோகித் சர்மா எடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, ரோகித் தலைமையில் இந்திய அணி விளையாடிய கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது.
சில தினங்களுக்கு முன், பார்டர் கவாஸ்கர் தொடருக்குப் பின் ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியானது. அதற்கு ஏற்றார்போல், ஐந்தாவது டெஸ்ட்டுக்கான பயிற்சியின் போது, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பந்துவீச்சாளர் பும்ராவுடன் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சியை மட்டுமே மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். இதுதொடர்பாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் ரோகித் தனது முடிவை அறிவித்திருந்தார் எனவும் இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது. ரோகித் சர்மாவுக்குப் பதில் சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிட்னியில் நாளை தொடங்கும் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா விலகிய நிலையில் கே.எல்.ராகுல் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார். காயமடைந்த ஆகாஷ் தீப்புக்குப் பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த சில போட்டிகளாகவே பும்ராவே கேப்டனாக நீடிக்கலாம் என்றும் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தால் கூட சரியாக இருக்கும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அந்த கருத்துக்களை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.