புஜாரா - உமேஷ் - தவான் - சாஹல்
புஜாரா - உமேஷ் - தவான் - சாஹல் PT
கிரிக்கெட்

'இவர்களின் கதி அவ்வளவுதானா?'- இஷான், ஸ்ரேயாஸ் உடன் கழட்டிவிடப்பட்ட 4 மூத்த வீரர்கள்!

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுடனான 2023-2024 ஆண்டுக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தை புதன்கிழமையான நேற்று வெளியிட்டது. வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிந்திர ஜடேஜா முதலிய 4 வீரர்கள் டாப் பட்டியலில் இணைக்கப்பட்ட அதேநேரத்தில், கடந்தாண்டு B மற்றும் C பிரிவுகளில் இணைக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் இந்தாண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

இது அதிகப்படியான தண்டனை?

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டதை குறிப்பிட்டு காட்டியிருந்த பிசிசிஐ, தேசிய அணிகளில் பங்கேற்று விளையாட முடியாத போது வீரர்கள் நிச்சயம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற பரிந்துரையையும் சுட்டிக்காட்டியது. இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ரஞ்சிப்போட்டிகளை புறக்கணித்த நிலையில், பிசிசிஐ இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

shreyas iyer

அதேநேரம் கடந்த 2023 உலகக்கோப்பை தொடரில் 530 ரன்கள் மற்றும் அரையிறுதியில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன் இருவரையும் ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றியது பெரிய தண்டனை, வேண்டுமானால் கிரேடை குறைத்திருக்கலாம் என்ற கருத்தை ரசிகர்கள் வைத்துவருகின்றனர்.

Ishan Kishan

அதேவேளையில் பிசிசிஐ செய்தது சரிதான், இல்லையேல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டை போன்று வீரர்கள் டி20 லீக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற கருத்தையும் ரசிகர்கள் வைத்துவருகின்றனர்.

புறக்கணிக்கப்பட்ட 4 மூத்தவீரர்கள்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரை தாண்டி, ”சட்டீஸ்வர் புஜாரா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ் மற்றும் யஸ்வேந்திர சாஹல்” முதலிய 4 மூத்த வீரர்களையும் பிசிசிஐ புறக்கணித்துள்ளது. ஒரு காலத்தில் அணியின் நீக்கப்பட முடியாத கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை அவ்வளவு தானா? முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

ஷிகர் தவான்

கடந்தாண்டு 2022-2023 மத்திய ஒப்பந்தத்தில் இருந்த வீரர்கள் பட்டியலில் இருந்து, “சட்டீஸ்வர் புஜாரா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ் மற்றும் யஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர், தீபக் ஹூடா” முதலிய வீரர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

சாஹல்

விராட் கோலியை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சட்டீஸ்வர் புஜாரா, ராகுலுக்கு முன் இந்திய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷிகர் தவான், டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை பெற்றுத்தந்த யஸ்வேந்திர சாஹல் மற்றும் எப்போது அணிக்குள் எடுக்கப்பட்டாலும் ஜொலிக்கும் உமேஷ் யாதவ் முதலிய 4 வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

விரக்தியில் பதிவிட்ட மூத்த வீரர்கள்!

சமீபத்தில் உமேஷ் யாதவ், “புத்தகங்கள் மீது படியும் தூசியால் கதைகள் முடிந்துவிடுவதில்லை” என்றும், ”எப்போது அணியில் இடம் கிடைத்தாலும் அனைத்தையும் செய்ய காத்திருப்பதாக” புஜாரா மற்றும் ஷிகர் தவான் இருவரும் தெரிவித்திருந்தனர்.

உமேஷ் யாதவ்

சட்டீஸ்வர் புஜாராவை பொறுத்தவரையில் இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில், “சச்சின் டெண்டுல்கர் (15921 ரன்கள்), ராகுல் டிராவிட் (13265 ரன்கள்), சுனில் கவாஸ்கர் (10122 ரன்கள்), விராட் கோலி (8848 ரன்கள்), விவிஎஸ் லக்சுமன் (8781 ரன்கள்), விரேந்திர சேவாக் (8503 ரன்கள்), சவுரவ் கங்குலி (7212 ரன்கள்)” முதலிய 7 வீரர்களுக்கு பிறகு சட்டீஸ்வர் புஜாரா 7195 ரன்கள் குவித்துள்ளார்.

கோலி - புஜாரா

இன்னும் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் கங்குலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை புஜாரா பெறுவார். மீண்டும் மூத்தவீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.