செய்தியாளர் ; M.மீரா
23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், 72 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 125 வீரர்கள் (77 ஆண்கள், 48 பெண்கள்) 13 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆண்களுக்கான 79 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் அஜய் பாபு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இவர், 'ஸ்னாட்ச்' (snatch) பிரிவில் 149 கிலோவையும் க்ளீன் & ஜெர்க் பிரிவில் 181 கிலோவையும் தூக்கி , மொத்தமாக 330 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பாரா தடகளப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று ஷர்மிளா தன்கர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான எஃப்57 (Shot Put/குண்டு எறிதல்) பிரிவில் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 40 வயதான இவர், 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து முதலிடத்தைப் பிடித்தார்.
இதே பிரிவில் நடந்த சில குழப்பங்களுக்கு மத்தியில், இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீராங்கனையான ஷில்பா ஷைலாவுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து நைஜீரியா தரப்பில் புகார் அளிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் போட்டியிட்ட தேசிய சாதனையாளரான சர்வேஷ் குஷாரே, வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். 31 வயது இந்தியரான இவர், 2.25 மீட்டர் உயரத்தைத் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இப்போட்டியில் பங்கேற்ற மற்றோர் இந்தியரான ஆதர்ஷ் ராம், 2.15 மீட்டர் உயரத்தைக் கடந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மகளிர் 58 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில், அனுபவம் வாய்ந்த இந்திய வீராங்கனையான பிந்த்யாராணி தேவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.'
ஸ்னாட்ச்' (snatch) பிரிவில் 87 கிலோ எடையையும் க்ளீன் & ஜெர்க் பிரிவில் 112 கிலோ எடையையும் தூக்கி, மொத்தமாக 199 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.