இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் திருப்பதி கோயிலும் ஒன்று. இங்கு தினமும் பல லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சர்வ தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் ஏறக்குறைய 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கெனவே திருப்பதியில் அக்டோபர் மாத இறுதி வரை ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்கள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. இப்படியாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்களை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் 18ஆம் தேதிதான் வெளியிட்டு வருகிறது.
இதில், ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை, எலக்ட்ரானிக் லக்கி டிப், கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை, வருடாந்திர புஷ்பயாகம், விர்சுவல் சேவா டிக்கெட், அங்கப்பிரதட்சணம், ஸ்ரீவாணி டிரஸ்ட், மூத்த குடிமக்கள், மாற்று திறன் கொண்டவர்களுக்கான டிக்கெட், ரூ.300 சிறப்பு தரிசனம் என பலவிதமான தரிசன டிக்கெட்களை நமக்கு வழங்கி வருகிறது.
ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நவம்பர் மாதம் வழிபட கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.. அதன்படி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கடந்த 18-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.. எலக்ட்ரானிக் குலுக்கலுக்கு 20-ந்தேதியான இன்று காலை 10 மணி வரை பக்தர்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் வெளியிட்டப்பட்டது.. குலுக்கல் மூலம் டிக்கெட்டுகள் கிடைத்தவர்கள் ஆகஸ்ட் 20 முதல் 22ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்குள் தரிசன கட்டணம் செலுத்தி டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை, புஷ்ப யாகம் ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதில் விர்ச்சுவல் சேவைகள் மற்றும் அவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் 21-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதில் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் அன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது..
மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது..
அத்துடன் திருப்பதியில் நவம்பர் மாதம் தங்குவதற்கான அறைகளுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 25-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தனது அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ttdevasthanams.ap.gov.in என்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.